July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

நீர் நிலைகளில் மீட்பது எப்படி? அகரம் அரசுப் பள்ளியில் தீயணைப்புத் துறையின் ஒத்திகை.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் கிராமத்து அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று மாணவர்களுக்கான பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புப் பணிகள் குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அண்மைக்காலமாக நீர் நிலைகளில் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்க்கும் பொருட்டு, போச்சம்பள்ளி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் இந்தச் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போச்சம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மாணவர்களுக்குப் பல்வேறு செயல்முறை விளக்கங்களைச் செய்து காண்பித்தனர்நீர் நிலைகளில் யாராவது சிக்கிக் கொண்டால், அவர்களை எப்படிப் பாதுகாப்பாக மீட்பது என்பது குறித்து விளக்கப்பட்டது. ஆபத்தான கட்டத்தில், வீட்டில் எளிதாகக் கிடைக்கும் காலியான பிளாஸ்டிக் கேன்களைப் பயன்படுத்திப் பாதிக்கப்பட்டவர்கள் நீரில் மூழ்காமல் தங்களைப் பிடித்துக் கொண்டு தற்காத்துக் கொள்ளும் வகையில், அவற்றை எப்படி வீச வேண்டும் என்ற ஒத்திகை செய்து காட்டப்பட்டது.

வெள்ளம் மற்றும் நீர் நிலை விபத்துகளின் போது பதற்றமடையாமல் செயல்படுவது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவர்கள் இத்தகைய எளிய பேரிடர் கால உத்திகளைக் கற்றுக் கொள்வதன் மூலம், தங்களைச் சுற்றியுள்ளவர்களின் உயிர்களை ஆபத்தான நேரங்களில் காப்பாற்ற முடியும் என்று தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர். இந்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர். தீயணைப்புத் துறையினரின் இந்த உபயோகமான செயல்முறை விளக்கம் பள்ளி நிர்வாகம் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.