June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

டெல்லி குண்டுவெடிப்பு நாட்டின் அமைதியை குலைக்கும் செயல் :எபிபிஎஸ் தலைவர் திருமலை எம். ரவி கண்டனம்

திருச்சி. நவ 13-

திருச்சி அகில பாரத பார்க்கவ குல சங்கமான எபிபிஎஸ் தலைவர் திருமலை எம். ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டெல்லியில் நடைபெற்ற குண்டுவெடிப்பு மனிதநேயம் மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படை மதிப்புகளை மீறிய பயங்கரவாதச் செயல் ஆகும். அப்பாவி பொதுமக்களின் உயிரைப் பலிகொள்வது போன்ற இந்த தாக்குதல், நாட்டின் அமைதியையும் ஒற்றுமையையும் சிதைக்க முயல்கிறது. இப்படிப்பட்ட சம்பவங்களை எந்த நிலையிலும் அனுமதிக்க முடியாது. மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து விரைந்து விசாரணை நடத்தி, குற்றவாளிகளை பிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இன்றைய சூழலில் நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. தொழிற்சாலைகள், வர்த்தக வளாகங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற மக்கள் நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தக்க நிவாரணம் வழங்கப்பட வேண்டும். காயமடைந்தவர்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும். பயங்கரவாதத்தை ஒழிக்க அரசு மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனும் விழிப்புணர்வுடன் இருந்து சமுதாயத்தில் அமைதியை நிலைநிறுத்த பாடுபட வேண்டும். என்பது லட்சம் மக்கள் தொகை கொண்ட அகில பாரத பார்க்கவ குல சங்கம் எபிபிஎஸ் ன் சார்பில், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இத்தகைய மனிதாபிமானமற்ற செயல்கள் இனி எங்கும் நடைபெறாத வகையில் அரசும் மக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென வலியுறுத்துகிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.