June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது :

புதுச்சேரி மாநிலத்தில் நிலவி வரும் கல்வி மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் குறித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது.

கடந்த கால திமுக-காங்கிரஸ் கூட்டணி அரசு, கல்வியில் இருமொழி மற்றும் மும்மொழி கொள்கை குறித்து தெளிவான முடிவை எடுக்காததே இன்றைய கல்விச் சிக்கல்களுக்குக் காரணம். மத்திய அரசின் திடீர் அறிவிப்புகளால் மாணவர்கள் குழப்பமடைந்துள்ள நிலையில், புதுச்சேரி அரசு இதில் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

புதுச்சேரிக்கு என தனி கல்வி வாரியம் இல்லாததால், தமிழகக் கல்வி வாரியத்தையே நாம் பின்பற்றி வருகிறோம். தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ‘இருமொழிக் கொள்கை’ மட்டுமே பின்பற்றப்படும் என்பதில் உறுதியாக இருந்தார். அந்த அடிப்படையில், தமிழகத்தைப் பின்பற்றும் புதுச்சேரியில் மட்டும் சிபிஎஸ்இ உள்ளிட்ட பள்ளிகளில் மும்மொழி கொள்கையைத் திணிக்க வேண்டிய அவசியம் என்ன?.

மும்மொழி கொள்கையில் அதிமுகவிற்கு உடன்பாடில்லை என்பதும், இருமொழிக் கொள்கையே கட்சியின் உறுதியான நிலைப்பாடு என்பதும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அரசு பொது விடுமுறை அறிவித்தாலும், சில தனியார் பள்ளிகள் விதிகளுக்குப் புறம்பாகச் சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகின்றன. இத்தகைய பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கல்வித்துறை அதிகாரிகள், கையூட்டுகளைப் பெற்றுக்கொண்டு தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும், இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இந்நிலை நீடித்தால் கல்வித்துறையை கலைத்துவிடலாம்.

கல்வி மட்டுமின்றி, புதுச்சேரியில் சிறார் குற்றங்கள் சாதாரண குற்றங்களை விட அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு குற்ற வழக்குகளில் சிக்கிய சிறுவர்கள், இன்று சினிமா பாணி ரவுடிகளாக வலம் வருகின்றனர். சிறார் நீதிச் சட்டத்தைச் சரியாகப் பின்பற்றாமல் காவல்துறை பாகுபாடு காட்டுவதாகவும், போக்குவரத்து விதிகளை அமல்படுத்துவதில் மெத்தனமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கல்வி மற்றும் பாதுகாப்பு ஆகிய இரண்டிலும் புதுச்சேரி அரசு உடனடியாகச் சீரான நிலைப்பாட்டை எடுத்து, மாணவர்களின் எதிர்காலத்தையும் மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.