புதுச்சேரி: ஜன 05,
மத்தியில் ஆளும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, தனிநபர் துதி பாடும் அரசியலை ஒழித்து, மக்கள் நலனை முன்னிறுத்தியே திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகப் புதுச்சேரி மாநில பா.ஜ.க தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், மாநிலத் தலைவர் வி பி ராமலிங்கம் மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
பெயர் மாற்ற அரசியலும் மக்கள் சேவையும்
”கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் சுமார் 600-க்கும் மேற்பட்ட திட்டங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்களே சூட்டப்பட்டன. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சர்தார் வல்லபாய் படேல், லால் பகதூர் சாஸ்திரி போன்ற தேசத் தலைவர்கள் கூடப் புறக்கணிக்கப்பட்டு, இரண்டாம் தரக் குடிமக்களாகவே நடத்தப்பட்டனர்.
ஆனால், பிரதமர் மோடி அவர்கள் தனது பெயரையோ அல்லது மற்றவர்களின் பெயரையோ திட்டங்களுக்குச் சூட்டாமல், மக்கள் சேவையை முன்னிறுத்தி ‘லோக் பவன்’, ‘கர்த்தவ்யா பாதை’ (கடமையின் பாதை) எனப் பெயர் மாற்றம் செய்துள்ளார். இதுவே பா.ஜ.க-வின் கொள்கை வழி” என்று அவர்கள் தெரிவித்தனர்.
MNREGA திட்டத்தில் புரட்சிகர மாற்றங்கள்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் (MNREGA) செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்துப் பேசிய அவர்கள்,
காங்கிரஸ் ஆட்சியை விட மோடி அரசு இத்திட்டத்திற்கு அதிகபட்சமாக 8.53 லட்சம் கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.
புதிய ‘விசித் பாரத்’ (VB-G RAM G) திட்டத்தின் கீழ், வேலை நாட்கள் 100-லிருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
பழங்குடியினருக்குக் கூடுதலாக 25 நாட்கள் வேலை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை ஊதியம் என்பதற்குப் பதிலாக, இனி வாரந்தோறும் ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தொழில்நுட்ப உதவியுடன் (GPS மற்றும் AI) முறைகேடுகள் தடுக்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு மட்டுமே பலன்கள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சட்டச் சீர்திருத்தம் மற்றும் வறுமை ஒழிப்பு
ஆங்கிலேயர் காலத்து அடிமைத்தனமான சட்டங்களுக்குப் பதிலாக, இந்தியத் தன்மையுடன் கூடிய புதிய சட்டங்களான BNS, BNSS மற்றும் BSA அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும், மோடி அரசின் சிறப்பான செயல்பாட்டால், கிராமப்புற வறுமை 25.7 சதவீதத்திலிருந்து 4.86 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும் அவர்கள் பெருமிதத்துடன் குறிப்பிட்டனர்.
”காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணிக்கு ‘வளர்ந்த இந்தியா’ மற்றும் ‘ஸ்ரீ ராம்’ என்ற பெயர்களைப் பார்த்தாலே ஏன் இவ்வளவு வெறுப்பு?” எனப் பத்திரிகையாளர் சந்திப்பின் போது தலைவர்கள் கேள்வி எழுப்பினர். இந்த சந்திப்பின்போது ஏராளமான பாஜகவினர் உடன் இருந்தனர்.

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!