June 13, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 43 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் மா சாகுபடி செய்து, அதனைத் தங்கள் பிள்ளைகளைப் போல பராமரித்து வந்த இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மாங்காய்க்கு முறையான விலை நிர்ணயம் இல்லாததால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் ஒரு கிலோ மாங்காய் வெறும் 4 ரூபாய் முதல் 6 ரூபாய் வரை மட்டுமே விற்பனைக்கு வியாபாரிகள் வாங்கி வருகின்றனர், அதனால் அதிர்ச்சியடைந்த போச்சம்பள்ளி பகுதி மா விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாகவே வேறு வழியின்றி மாமரங்களை அடியோடு வெட்டி, செங்கல் சூளைகளுக்கு விறகாக விற்று வருகின்றனர் அதேபோன்று நடப்பு ஆண்டிலும் மாங்காய் விளைச்சல் ஓரளவுக்கு நன்றாக இருந்தபோதிலும், சந்தையில் போதிய விலை கிடைக்கவில்லை. இதனால் போட்ட முதலீட்டைக் கூட எங்களால் எடுக்க முடியாமல் விவசாயிகள் மீண்டும் மாமரங்களை வெட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன இதன் உச்சக்கட்டமாக, போச்சம்பள்ளி அருகே உள்ள பாப்பானூர் கிராமத்தைச் சேர்ந்த தேன்.பழனிசாமி என்ற விவசாயி, தனது தோட்டத்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட மாமரங்களை இன்று அடியோடு வெட்டிச் சாய்த்தார்.
இந்த மரங்கள் சாதாரணமானவை அல்ல; ஆங்கிலேயர் காலத்தில் அவரது முன்னோர்களால் நடப்பட்டு, தலைமுறை தலைமுறையாகக் காக்கப்பட்டு வந்த பிரம்மாண்டமான மரங்கள் ஆகும்.மரங்கள் வெட்டப்பட்டு தரையில் விழுந்ததைக் கண்டு விவசாயி பழனிசாமி கண்ணீர் மல்கக் கூறியதாவது:
“இந்த மாமரங்களை என் முன்னோர்கள் ஆங்கிலேயர் காலத்தில் வச்ச மரம். எங்க குடும்பத்தை இத்தனை வருஷமா குடும்பத்தையே காப்பாத்தின மரங்கள். இந்த வருஷம் எப்படியாவது நல்ல விலை கிடைக்கும்னு நம்பி, கடன் வாங்கி உரம் போட்டு, மருந்தடிச்சு செலவு பண்ணுனேன். ஆனா, இப்போ பழத்தை கேப்பாரில்லை.
வாங்கிய கடனைத் திருப்பிக் கேட்க கடன்காரங்க வீட்டு வாசல்ல நிக்கிறாங்க. அவங்களுக்குப் பதில் சொல்ல முடியாம, வேற வழியே இல்லாம, பெத்த பிள்ள மாறி வளர்த்த மரங்களை வெட்டி விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த மரங்களை வித்து வர்ற காசை வச்சுதான் கடனை அடைக்கப் போறேன்.ஒருபுறம் வறட்சி, மறுபுறம் போதிய விலை இல்லாமை என இருமுனைத் தாக்குதலால் கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயிகள் நிலைகுலைந்து போயுள்ளனர். பாரம்பரியமிக்க மாமரங்கள் செங்கல் சூளைகளுக்கு விறகாவதைத் தடுக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கவும் அரசு உடனடியாக தலையிட்டு, மாங்காய்க்கு நியாயமான குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.