July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரியில் அபூர்வ ‘குதிரை வேள்வி’: சித்தர்கள் முன்னிலையில் நடைபெற்ற பிரம்மாண்ட அஸ்வமேத யாகம்!

புதுச்சேரி உலக நன்மை மற்றும் அமைதியை வலியுறுத்தி, புதுச்சேரி முருங்கப்பாக்கம் மந்தக்கரை மைதானத்தில் நேற்று (01.03.2026) நடைபெற்ற “சித்தர் மாநாடு மற்றும் அஸ்வமேத யாகம்” மிகுந்த பக்திப் பெருக்குடன் அரங்கேறியது. இந்த நிகழ்வின் சிகர நிகழ்ச்சியாக நடைபெற்ற அபூர்வமான ‘குதிரை வேள்வி’ பக்தர்களைப் பெருமளவில் கவர்ந்தது.

உலக அமைதி வேண்டி வளர்க்கப்பட்ட இந்த மகா யாகத்தில், பல வகையான அரிய வகை மூலிகைகள் அக்னியில் சமர்ப்பிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன.

இந்த நிகழ்வின் மிக முக்கிய அங்கமாக, குதிரை வேள்வி நடத்தப்பட்டது. இதற்காக அழைத்து வரப்பட்ட குதிரையானது, வேத மந்திரங்கள் முழங்க யாக குண்டத்தை ஒன்பது முறை (9) சுற்றி வந்து வலம் வந்தது.

குதிரை வலம் வந்த பிறகு, வடிவமைக்கப்பட்ட மரத்தினால் ஆன குதிரை யாக குண்டத்தினுள் அர்ப்பணிக்கப்பட்டு, வேள்வி மிகச் சிறப்பாக நிறைவேற்றப்பட்டது.

நேற்று மதியம் 2:00 மணி அளவில் தொடங்கிய இந்த மாநாட்டில், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த 10-க்கும் மேற்பட்ட சித்தர்கள் மற்றும் ஆன்மீகப் பெரியோர்கள் பங்கேற்று அருளாசி வழங்கினர்.
ஸ்ரீ திரௌபதியம்மன் கோவில் திடல் அருகிலுள்ள மந்தக்கரை மைதானத்தில் நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு யாகத்தின் புகையையும், சித்தர்களின் தரிசனத்தையும் பெற்றுச் சென்றனர்.