June 13, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலம்,14/06/2026.

சேலத்தில்,கள்ள உறவுக்கு இடையூறாக இருந்த ஒன்றரை வயது குழந்தையை விஷம்(பூச்சிக்கொல்லி மருந்து)கொடுத்து கொலை செய்த கொடூர தாய் – குழந்தைக்கு வலிப்பு வந்ததாக நாடகம்.

சேலம் மாவட்டம் தலைவசால் அருகில் உள்ள வரகூர் தெற்கு காடு திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் திருமலை வாசுதேவன்.

இவரின் மனைவி லலிதா.

இந்தத் தம்பதிக்கு ஹர்சன் ராஜ், புவன் ராஜ் ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

5 வயதான ஹர்சன் ராஜை வாசுதேவன் பராமரித்து வரும் நிலையில், ஒன்றரை வயது புவன் ராஜை தாய் லலிதா பராமரித்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் புவன் ராஜிற்குத் திடீரென வலிப்பு ஏற்பட்டதாகக் கூறி ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தள்ளார். சிகிச்சை பலனின்றி குழந்தை புவன் ராஜ் உயிரிழந்துள்ளான்.

குழந்தையின் இறப்பில் சந்தேகமடைந்த மருத்துவர்கள் உடற்கூறாய்வுக்கு உடலை அனுப்பியுள்ளனர். விஷம் கலந்த உணவை உட்கொண்டதே குழந்தையின் இறப்புக்குக் காரணம் என்பது உடற்கூறு ஆய்வுகளின் முடிவில் தெரிய வந்திருக்கிறது.

தாய் லலிதா
இது குறித்து மருத்துவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

தகாத உறவுக்கு குழந்தை இடையூறாக இருப்பதால் தாய் லலிதாவே உணவில் விஷம் வைத்து கொன்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. தாய் லலிதாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இது குறித்து தெரிவித்த காவல்துறையினர், “கட்டட வேலைக்குச் சென்று வந்த லலிதாவிற்கு கட்டடத் தொழிலாளி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தகாத உறவுக்கு குழந்தை இடையூறாக இருப்பதாகக் கருதி சாப்பிட்டில் விஷம் வைத்து குழந்தைக் கொன்றதுடன், வலிப்பு வந்ததாக நாடகமாடியிருக்கிறார். மருத்துவ ஆய்வில் தெரியவந்ததும் உண்மையை ஒப்புக்கொண்டார். கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்‌” என்றனர்.