June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

இந்திய அரசியலின் மைய புள்ளியை தீர்மானித்தவர்முத்தமிழறிஞர் கலைஞர்திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் மதிவதினி புகழாரம் !

புதுச்சேரி, ஜூன். 7–
திமுகவை எதிர்த்தவர்கள் எல்லாம் இறந்து விட்டனர். ஆனால் திமுக நின்று கொண்டுதான் இருக்கிறது. இந்திய அரசியலின் மைய புள்ளியை தீர்மானித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் என்று திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் மதிவதனி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் 103-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு “திராவிடர் எழுச்சி நாள்” பொதுக்கூட்டம் புதுச்சேரி சுதேசி மில் அருகே நேற்று இரவு நடைபெற்றது.
புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ. வீரமணி, புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் இரா. சிவா முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் மதிவதனி, சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் நாஜிம், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், கார்த்திகேயன், விக்னேஷ் கண்ணன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டு முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் அரசியல் பயணம், தமிழ் மொழிக்காக அவர் ஆற்றிய பங்களிப்புகள், சமூகநீதி மற்றும் பகுத்தறிவுக் கொள்கைகளுக்காக மேற்கொண்ட நடவடிக்கைகள், கல்வி மற்றும் நலத்திட்டங்களில் அவர் ஏற்படுத்திய மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாஜிம், செந்தில்குமார், கார்த்திகேயன், செந்தில் (எ) ரமேஷ், விக்னேஷ் கண்ணன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் மதிவதனி, திராவிட இயக்க வளர்ச்சியில் கலைஞரின் பங்கு, அவரது எழுத்தாற்றல், நிர்வாகத் திறன் மற்றும் தமிழக அரசியலில் அவர் பதித்த அழியாத முத்திரை குறித்து பேசப்பட்டதுடன், இன்றைய தலைமுறையினர் கலைஞரின் சிந்தனைகளையும் கொள்கைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் பேசிய அவர், ஒரு சிலர் கலைஞர் குறித்து அவதூறு பேசுகின்றனர். ஆனால் அவர்கள் பிறப்பதற்கு முன் கோபாலபுரத்தில் தன் சொந்த உழைப்பில் வீடு வாங்கியவர் கலைஞர். நின்று நிதானமாக பேசுவதற்கு கொள்கை தேவை, அரசியல் புரிதல் தேவை, வரலாறு தேவை. ஆனால் அப்படி ஒன்றும் இல்லாதவர்கள் வீதியில் இறங்கி கத்திகொண்டு செல்ல வேண்டியதுதான். எங்களிடத்தில் கொள்கை இருக்கிறது, அரசியல் இருக்கிறது, தலைவர்கள் இருக்கிறார்கள். தலைவர்கள் மறைந்தாலும், அதை தூக்கி பிடிப்பதற்கு ஆயிரம் ஆயிரம் மதிவதனிகள் வந்துகொண்டே இருப்பார்கள். இந்த இயக்கம் வீழாது. அடிக்கிற காற்றில் யார் வேண்டுமானாலும் வரலாம். அதனைத் தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்கள் விரைவில் உணர்வார்கள்.
ஆட்சியில் இருப்பது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஆள்வது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான். காரணம் மகளிர் விடியல் பயணம், மகளிர் உதவித்தொகை, திருநெல்வேலி மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தில் படித்த ஒரு மாணவன் இன்று ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று கலெக்டராக பதவி ஏற்றுள்ளார். இந்தத் திட்டங்களை எல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் வயிற்றெறிச்சலால் கொண்டுவரப்பட்ட புராடக்ட் தான் (விஜய்) இன்று விற்பனை ஆகியுள்ளது. அந்தப் புராடக்ட்டின் ஆயுட்காலம் இன்னும் ஐந்து மாதங்களில் காலாவதியாவிடும். திமுகவை எதிர்த்தவர்கள் எல்லாம் இறந்து விட்டனர். ஆனால் திமுக நின்று கொண்டுதான் இருக்கிறது. இந்திய அரசியலின் மைய புள்ளியை தீர்மானித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் என்றார். இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில், திக, திமுக, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகள், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.