July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

போச்சம்பள்ளி அருகே கோர விபத்து: இளம்பெண் உயிரிழப்பு; கணவர் கவலைக்கிடம், 2 வயது குழந்தை காயம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே ஓலைப்பட்டி சிப்காட் பகுதியில் உள்ள எலுமிச்சம்பள்ளம் அருகே இன்று ஏற்பட்ட சாலை விபத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் குப்பநத்தம் பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன் (32), தனது மனைவி சபீனா (26) மற்றும் 2 வயது குழந்தையுடன் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரிமங்கலத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வைக்கோல் ஏற்றி சென்ற பொலிரோ பிக்அப் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில், சபீனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்த சதாம் உசேனுக்கு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 2 வயது குழந்தை லேசான காயங்களுடன் மீட்கப்பட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
புலியூரில் இருந்து சிப்காட் வரை உள்ள ஒருவழிச் சாலையில் காலை, மாலை நேரங்களில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக போச்சம்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்