June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே அரசு குட்டையில் நள்ளிரவில் மண் கடத்தல் – கோவில் பொருட்கள் கண்டெடுப்பால் பரபரப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசுக்குச் சொந்தமான குட்டையில் நள்ளிரவு நேரங்களில் மர்ம நபர்கள் மண் கடத்தலில் ஈடுபட்டு வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போச்சம்பள்ளி அடுத்த மடத்தானூர் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான குட்டை ஒன்று உள்ளது. இந்தக் குட்டையில் கடந்த சில தினங்களாக நள்ளிரவு நேரங்களில் மர்ம கும்பல் ஜே.சி.பி மற்றும் டிராக்டர்களைப் பயன்படுத்தி பல அடி ஆழத்திற்கு மண் அள்ளி கடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு மண் கடத்தலில் ஈடுபட்ட கும்பல், மண்ணைத் தோண்டும்போது உள்ளே புதைந்து கிடந்த கோவில் பூஜை பொருட்களைக் கண்டெடுத்துள்ளனர். மர்ம நபர்கள் அந்தப் பொருட்களை குட்டையின் ஓரத்தில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். இன்று காலை அப்பகுதி மக்கள் குட்டை ஓரத்தில் பித்தளை விளக்குகள் உள்ளிட்ட கோவில் பொருட்கள் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போச்சம்பள்ளி போலீசார், அங்கிருந்த பூஜை பொருட்களைப் பறிமுதல் செய்தனர். மேலும், அரசு நிலத்தில் சட்டவிரோதமாக மண் கடத்தலில் ஈடுபட்டது மற்றும் கோவில் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மண் கடத்தல் கும்பலை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.