June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கிருஷ்ணகிரி டோல்கேட்டை இடமாற்றம் செய்யாவிட்டால் சட்ட நடவடிக்கை’

கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் விதிமுறைகளை மீறி இயங்கும் டோல்கேட்டை இடமாற்றம் செய்யக்கோரி, இளைஞர்கள் சிலர் நேற்று மாவட்ட கலெக்டர் ச.தினேஷ்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தொடர்ந்து அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம், 18 லட்சம் பேர் உள்ளனர். இதில், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரி – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டோல்கேட்டை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். நகராட்சி எல்லையிலிருந்த, 10 கி.மீ., தொலைவிற்குள் டோல்கேட் அமைக்க கூடாது என்பது விதி. ஆனால், கிருஷ்ணகிரி நகராட்சிக்கு, 800 மீட்டர் தொலைவில் இந்த டோல்கேட் அமைந்துள்ளது. வேப்பனஹள்ளி, ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி தொகுதி மக்கள் கிருஷ்ணகிரிக்கு அன்றாடம் வந்து செல்கின்றனர் பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு செல்வதற்கும், கிருஷ்ணகிரி மக்கள் கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவமனைக்கு செல்வதற்கு கூட டோல்கேட்டில் கட்டணம் செலுத்தும் நிலை உள்ளது.

_வார இறுதி நாட்களில், 5 கி.மீ., தூரம் வரை வாகன நெரிசலும் ஆம்புலன்ஸ், அவசர சேவை வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. கிருஷ்ணகிரி மக்கள், தங்கள் தினசரி தேவைகள் மற்றும் குறுகிய தூர பயணங்களுக்கு கூட டோல்கேட் கட்டணம் கட்ட வேண்டிய நிலை உள்ளது. எனவே உள்ளூர் வாகனங்களுக்கு டோல்கேட்டில் கட்டண விலக்கு அளிக்க வேண்டும். விதிகளை மீறி இயங்கும் டோல்கேட்டை, 10 கி.மீ., தொலைவில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினோம். இதுகுறித்து, ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருவதாகவும், சின்னார் பகுதியில் டோல்கேட் அமைக்க மாற்று ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் கலெக்டர் தினேஷ்குமார் கூறினார். வரும் டிச.,க்குள் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்றார். அதற்கு மேலும் தீர்வு காணப்படாத பட்சத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது குறித்து மனு அளித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.