February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

விழுப்புரம் மாவட்டம் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் கார்த்திகை மாத அமாவாசை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் கூட்ட நெரிசல் தவிர்க்க புதிய முறையாக மாற்று பாதை

விழுப்புரம் மாவட்டம் உலக பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கார்த்திகை மாத அமாவாசை முன்னிட்டு அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு பால் தயிர் பன்னீர் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

அதன் பின் வண்ண மலர்கள் , தங்க கவச அலங்காரம் செய்து
சர்க்கரை பொங்கல், சுண்டல் பல்வேறு வகையான பழங்களை கொண்டு நெய்வேத்தியமும் அதனைத் தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது.

அதன்பின் நீண்ட நெடு வரிசையில் காத்துக் கொண்டிருந்த பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

உற்சவர் அங்காளம்மன் அண்ணாமலையார் உடன் உண்ணாமுலை அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

நாள் முழுவதும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்திருந்த நிலையில் இரவு 11 மணிக்கு மேல் பூசாரிகள் வழக்கப்படி உற்சவர் அங்காளம்மன் பிரத்தியேகமாக அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சல் மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டு பூசாரிகள் வழக்கப்படி தாலாட்டு பாடி தீபாரதனை எடுத்து ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

நாள் முழுவதும் விரதம் இருந்து ஊஞ்சல் உற்சவம் காண வேண்டி இலட்சக்கணக்கான பக்தர்கள் கையில் தீபம் ஏந்தி ஓம் சக்தி அங்காளம்மா என்ற கோஷத்துடன் அங்காளம்மனை தரிசனம் செய்தனர்.

இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவலிங்கம், திருக்கோயில் உதவி ஆணையர் சக்திவேல் தலைமையில் கழிப்பறை , குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை பூசாரி மற்றும் பிற அறங்காவலர்கள் ஊஞ்சல் உற்சவத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

கூட்ட நெரிசலை தவிர்க்க விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் 600 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தடுப்பணைகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடபட்டனர்.

முதன்முறை மேற்கு வாயில் வழியாக பக்தர்களை அனுமதித்து உற்சவர் சன்னதி தரிசனம் 4 மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்தது பக்தர்களிடையே வரவேற்பு பெற்றது.

Facebook
YouTube
Instagram
WhatsApp