June 30, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகள்

கிருஷ்ணகிரி, ஜூன் 28:

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பனை பாதுகாப்பு அமைப்பின் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் சிறப்பாக நடைபெற்றன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை மாணவர்களிடையே விழிப்புணர்வாக ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இப்போட்டிகளில் ஆறாம் வகுப்பு முதல் கல்லூரி மாணவர்கள் வரை சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

ஒவ்வொரு போட்டியிலும் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.2,000 மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இப்போட்டிகளுக்கு அரசு ஆடவர் கலைக் கல்லூரி பேராசிரியர் சங்கர் நடுவராகப் பணியாற்றி மாணவர்களின் திறமைகளை மதிப்பீடு செய்தார்.

போட்டி ஏற்பாடுகளை பசுமை காவலரும் யோகா ஆசிரியருமான க. வெங்கடேசன் தலைமையில், யோகா ஆசிரியை சுமித்ரா சிறப்பாக ஒருங்கிணைத்தார்.

இந்நிகழ்வில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது அனைவரின் கடமை என்பதையும், மாணவர்கள் இயற்கையை நேசித்து மரம் வளர்ப்பு, பனை பாதுகாப்பு உள்ளிட்ட சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்பதையும் ஏற்பாட்டாளர்கள் வலியுறுத்தினர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விரைவில் நடைபெறவுள்ள பரிசளிப்பு விழாவில் பரிசுத் தொகைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளதாக அமைப்பினர் தெரிவித்தனர்.