திமுக ஆட்சியின் மிகப் பெரிய சாதனை இதுதான் வஞ்சப் புகழ்ச்சி பாடிய டி.டி.வி. தினகரன்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சட்ட விரோதச் செயல்கள்,பொதுமக்களின் பாதுகாப்பை கேள்விக் குறியாக மாற்றி வருவதாக அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கடும் குற்றச்சாட்டை முன் வைத்து உள்ளார். குறிப்பாக, போதைப் பொருள் கடத்தல், சட்ட விரோத மதுபான விற்பனை போன்ற செயல்கள் மாநிலம் முழுவதும் வெளிப்படையாக நடைபெற்று வருவது, தற்போதைய திமுக அரசின் நிர்வாகத் தோல்வியை வெளிச்சம் போடுவதாக டி.டி.வி. தினகரன் தெரிவித்து உள்ளார்.
சட்டம் ஒழுங்கு மோசம்
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவில், சமீபத்தில் அரங்கேறி உள்ள இரண்டு சம்பவங்கள் தமிழகத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு சூழ்நிலையின் மோசமான நிலையை தெளிவாக எடுத்துக் காட்டுவதாக டி.டி.வி. தினகரன் குறிப்பிட்டு உள்ளார்.
சேலம், ராமநாதபுரம் சம்பவங்கள்
சேலம் மாவட்டம் மேச்சேரி பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக திமுகவைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவமும், ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 110 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ள சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக டி.டி.வி. தினகரன் தெரிவித்து உள்ளார்.
திமுக அரசின் சாதனை
பொதுமக்கள் நலன் பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களில், ஆளுங்கட்சியின் ஆதரவோடு சட்ட விரோத மதுபான விற்பனை நடைபெறுவதும், தமிழகத்தில் இருந்து எந்தவித அச்சமும் இன்றி அண்டை நாடுகளுக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படும் நிலையும் தான் திமுக ஆட்சியின் மிகப் பெரிய சாதனையாக மாறி உள்ளதாக அவர் கடுமையாக விமர்சித்து உள்ளார்.
ஆளுங்கட்சி நிர்வாகிகளின் பெயர்
இது போன்ற செயல்கள் இளம் தலைமுறையை சீரழிப்பதோடு மட்டுமல்லாமல், சமூக அமைதியையும் கடுமையாக பாதிக்கின்றன என்றும் அவர் சுட்டிக் காட்டி உள்ளார். தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு குற்றச் சம்பவங்களிலும், சட்ட விரோத நடவடிக்கைகளிலும் ஏதாவது ஒரு வகையில் ஆளுங்கட்சி நிர்வாகிகளின் பெயர் இடம் பெறுவது தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார்.
சிதைந்து வரும் நம்பிக்கை
மேலும், இத்தகைய விவகாரங்களில் தொடர்புடையவர்கள் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை, அரசியல் அழுத்தம் காரணமாக தயக்கம் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார். இதன் விளைவாக, காவல் துறையின் மீது மட்டுமல்ல, ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தின் மீதும் பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கை பெரிதும் சிதைந்து வருவதாக அவர் தெரிவித்து உள்ளார்.
உடனடி நடவடிக்கை தேவை
எனவே, தமிழகத்திற்குள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் எவ்வாறு நுழைகின்றன, அவை எந்த வழிகளில் அண்டை நாடுகளுக்குக் கடத்தப்படுகின்றன, இதன் பின்னணியில் செயல்படுபவர்கள் யார் என்பதைக் கண்டறிய திமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
டிடிவி தினகரன் வலியுறுத்தல்
எஞ்சியுள்ள ஆட்சிக் காலத்திலாவது தமிழகத்தில் வேரூன்றிப் போயுள்ள சட்ட விரோதச் செயல்களை முற்றிலும் கட்டுப்படுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பையும் சமூக ஒழுங்கையும் உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை எனவும் டி.டி.வி. தினகரன் தனது பதிவில் தெரிவித்து உள்ளார்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!