July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

காமராஜர் பிறந்தநாள் விழா: காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அன்னதானம்

கல்வியே நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் – திருநாவுக்கரசு பேச்சு

மணப்பாறை, ஜூலை 15:

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க, கல்வித்தந்தை பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் திருச்சி தெற்கு மாவட்டக் கழக செயலாளரும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான ரா. கதிரவன் தலைமையில் மணப்பாறை கோவில்பட்டி சாலையில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அறுசுவை அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் கூட்டணி கட்சியினர், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

காமராஜரின் வாழ்க்கை வரலாறு

விழாவில் சிறப்பு உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத்தின் திருச்சி தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் திருநாவுக்கரசு, பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை நினைவுகூர்ந்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

“பெருந்தலைவர் காமராஜர் தமிழக அரசியலில் மட்டுமல்ல, இந்திய அரசியல் வரலாற்றிலும் அழியாத முத்திரை பதித்த தலைவராவார். எளிமை, நேர்மை, தன்னலமற்ற பொதுச்சேவை ஆகியவற்றின் அடையாளமாக அவர் வாழ்ந்தார். பள்ளிக்குச் செல்ல முடியாத ஏழைக் குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஆயிரக்கணக்கான பள்ளிகளை திறந்தவர் காமராஜர். ஏழை மாணவர்கள் பசியின்றி கல்வி கற்க மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி கல்விப் புரட்சிக்கு அடித்தளம் அமைத்தார்.

அவரது ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் அணைகள், தொழிற்சாலைகள், மின்திட்டங்கள், சாலைகள் மற்றும் குடிநீர் வசதிகள் உருவாக்கப்பட்டன. ‘ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளி’ என்ற இலக்குடன் செயல்பட்டு கல்வி வளர்ச்சிக்கு அர்ப்பணித்ததால், மக்கள் அவரை ‘கல்வித்தந்தை’ என்று போற்றுகின்றனர்.

அதிகாரத்தில் இருந்தபோதும் எளிமையாக வாழ்ந்த காமராஜர், தனக்காக எதையும் சேர்த்துக் கொள்ளாமல் மக்களுக்காகவே வாழ்ந்தார். இன்றைய தலைமுறையினர் அவரது நேர்மை, பணிவு, தியாகம் மற்றும் மக்கள் நலச் சேவை போன்ற உயர்ந்த பண்புகளை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட வேண்டும். காமராஜரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்” என்றார்.

நிர்வாகிகள் பங்கேற்பு

விழாவில் மணப்பாறை வடக்கு நகரக் கழகச் செயலாளர் கே.சி. திருப்பதி, தெற்கு நகரக் கழகச் செயலாளர் அழகர், ஒன்றியச் செயலாளர்கள் பாண்டியன், பார்த்திபன், வெள்ளைச்சாமி, காயாம்பு, வையம்பட்டி சரவணன், தமிழக வெற்றிக் கழக நிர்வாகி அன்பரசன், நகராட்சி கவுன்சிலர்கள் ராஜா, எத்திராஜ், ஆர்பர் சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு காமராஜருக்கு மரியாதை செலுத்தினர்.