ஈரோடு மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை… 7 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் ரொக்கப் பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியதாக தகவல் நள்ளிரவு வரை நடைபெற்ற சோதனையால் பெண் ஊழியர்கள் அவதி.. ஈரோடு. ஜூலை.05 ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று முன் தினம் மாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை செய்தனர். இதில் கணக்கில் வராத ரொக்கப் பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இதில் பல லட்ச ரூபாய் பணமும், ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் ஒரே நேரத்தில் நடைபெற்ற இந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையால் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திலும் இந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையானது நடைபெற்றது. ஈரோடு மாநகராட்சி பொறுத்த வரை, 4 மண்டலங்கள், 60 வார்டுகளை கொண்டது. மாநகராட்சியின் மேயராக திமுகவை சேர்ந்த நாகரத்தினம் இருந்து வருகிறார். துணை மேயராக செல்வராஜையும் ஆணையாளராக அரபித் ஜெயின் இருந்து வருகின்றனர். ஈரோடு லஞ்ச ஒழிப்பு துறையின் டிஎஸ்பி சாந்தி மற்றும் இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையில் வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், மாநகராட்சி அலுவலக அறைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மாலை 4 மணி அளவில் தொடங்கிய இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை நள்ளிரவு 12 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது. சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையின் போது, அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை உள்ளே அமர வைத்து அவர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள், திட்ட பணிகளை செய்ய ஏலம் எடுத்துள்ள ஒப்பந்ததாரர்கள் குறித்தும், அவர்களின் ஒப்பந்த பணிகள் குறித்தும் விரிவாக விசாரணை செய்யப்பட்டது. இது குறித்த ஆவணங்கள் அனைத்தையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அலசி ஆராய்ந்தனர். இந்த சோதனையின் முடிவில் கணக்கில் வராத ரூபாய் ஒரு லட்சத்து, பத்தாயிரம் ரூபாயை கைப்பற்றியதாகவும், மேலும் பல்வேறு ஆவணங்கள் முக்கிய விவரங்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கியதாக தெரிகிறது. மேலும் ஈரோடு மாநகராட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல்கள் நடைபெற்று இருக்கலாம் என சந்தேகிக்கும் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேலும் இது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரம் நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கிய லஞ்ச ஒழிப்பு போலீஸ் ஆறின் சோதனை இரவு 12 மணி வரை நீடித்ததால், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிகிறது. அதே நேரம் நள்ளிரவு 12 மணி வரை நடைபெற்ற இந்த சோதனையால் அலுவலகத்தில் சிக்கிக்கொண்ட பெண் ஊழியர்கள் பெரும் அவதிக்கு ஆளானதாக கூறப்படுகிறது. மேலும் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சோதனையின் காரணமாக மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த பணிகளை எடுத்துள்ள ஒப்பந்ததாரர்களும் கலக்கத்தில் உள்ளனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்