June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலம்,16/05/2026.

சேலம் தெற்கில் வீடு தேடி வரும் புதிய திட்டம் – எதிர்பார்ப்பில் மக்கள். தவெகவின் ஆஃபர்.

சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்களின் குறைகளை நேரடியாக அறிய தவெக எம்.எல்.ஏ.,தமிழன் பார்த்திபன் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுளார்.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. சட்டப்பேரவையில் 6 கட்சிகளின் ஆதரவோடு முதலமைச்சர் விஜய் பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. இதுவரை முதலமைச்சர் விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் தரப்படவுள்ளதால் அதுதொடர்பான பேச்சுவார்த்தை நேற்று (மே 15)நடைபெற்றது.

இந்த நிலையில் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் தமிழக முதலமைச்சர் மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி 717 டாஸ்மாக் கடைகளை மூடினார். தொடர்ந்து 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதுவிற்றால் கடும் நடவடிக்கை எனவும் தெரிவித்தார். இந்த நிலையில் தவெக வெற்றி பெற்ற தொகுதிகளில் மக்களின் அடிப்படை வசதிகள் தொடங்கி என்னென்ன தேவை உள்ளதை கண்டறிந்து அறிக்கை தயாரிக்க எம்.எல்.ஏ.,க்களுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் ஒவ்வொரு தொகுதி எம்.எல்.ஏ.,க்களும் மக்களை சந்திக்க தொடங்கியுள்ளனர். அந்த வகையில் சமூக வலைத்தளப் பக்கத்தில் சேலம் தெற்கு தொகுதி தமிழன் பார்த்திபன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மக்களுடன் நான்.. சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி மக்களின் அன்பாலும், நம்பிக்கையாலும் இன்று நான் மக்கள் பிரதிநிதியாக சட்டமன்றத்தில் நிற்கிறேன்.

எனவே, தொகுதி மக்களின் குறைகளை நேரடியாக அறிந்து உடனுக்குடன் தீர்வு காணும் நோக்கத்தில், மக்களுடன் நான் என்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தை தொடங்க உள்ளோம். இனி ஒவ்வொரு பூத்திலும், ஒவ்வொரு வார்டிலும், ஒவ்வொரு பகுதியிலும்,கழக தோழர்கள் நேரடியாக மக்களை சந்தித்து, மக்கள் குறைகளை கேட்டு பதிவு செய்யவும், தேவைகளை உடனுக்குடன் தெரியப்படுத்தவும், அரசு திட்டங்கள் மக்களை சென்றடைய செய்யவும், மக்களுக்கும் கழகத்திற்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தவும் களப்பணியில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும், “வருகின்ற உள்ளாட்சி தேர்தலிலும் மக்கள் வெற்றி தொடர, இப்போதே வீடு வீடாக சென்று மக்கள் மனதை வெல்ல வேண்டும். மக்களோடு இருந்தால்தான் அரசியல் உயிரோடு இருக்கும் என்பதை உணர்ந்து அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுங்கள். மக்கள் நம்பிக்கையை காப்போம் சேலம் தெற்கின் வெற்றியை தொடர்வோம்” என தெரிவித்துள்ளார்.