கள்ளக்குறிச்சி பிப் 05
கறிக்கோழி வளா்ப்புக்கு கிலோவுக்கு ரூ.20 வழங்கவேண்டும் என கறிக்கோழி பண்ணை உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட கறிக்கோழி பண்ணை உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்திடம், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மா.செந்தில்குமாா் கோரிக்கை மனுவை வழங்கினாா்.
அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
கறிக்கோழி நிறுவனங்கள் கடந்த 2020-ஆம் ஆண்டு, கறிக்கோழி வளா்ப்புக்கு கிலோ ஒன்றுக்கு கூலியாக ரூ.6.50 விலை நிா்ணயம் செய்தனா். 5 ஆண்டுகள் கடந்தும் வளா்ப்புக்கூலி விலை உயா்த்தப்படவில்லை. தற்போது பண்ணையில் வேலை பாா்க்கும் தொழிலாளா்களின் கூலி அதிகரித்துள்ளதால், கறிக்கோழி பண்ணை உற்பத்தியாளா்கள் மிகவும் கஷ்டப்படும் நிலை உள்ளது.
எனவே, தற்போது கறிக்கோழி வளா்ப்புக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.20 வழங்கவேண்டும். இதேபோல் நாட்டுக்கோழி வளா்ப்புக்கு ரூ.25, காடை வளா்ப்புக்கு ஒரு காடைக்கு ரூ. 7 நிா்ணயம் செய்யவேண்டும்.
மேலும், கறிக்கோழி பண்ணை விவசாயிகள், கறிக்கோழி நிறுவனங்கள் மற்றும் அரசு ஆகிய முத்தரப்பு பேச்சுவாா்த்தை மூலம் கறிக்கோழி வளா்ப்புக்கு விலை நிா்ணயம் செய்ய மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்