August 26, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மத்தூரில் த.வெ.க அரசை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 58 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர்:
மத்தூர் பேருந்து நிலையத்தில், த.வெ.க அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் மத்தூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் குணா வசந்த அரசு, மத்தூர் மத்திய ஒன்றிய கழக செயலாளர் செந்தில் மற்றும் கே.ஆர்.கே.நரசிம்மன் ஆகியோர் தலைமையில், மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின் போது, திமுகவினர் மத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தார் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது த.வெ.க அரசை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திமுகவினர் முழக்கங்களை எழுப்பினர். இதனால் மத்தூர் பேருந்து நிலையம் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர், சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி, போராட்டத்தில் கலந்து கொண்ட 58 பேரை காவல்துறையினர் கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

திமுகவினரின் சாலை மறியல் போராட்டத்தால் மத்தூர் பேருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.