August 26, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலம்,05/08/2026.

80 மீட்டர் தேசியக் கொடி உலகச் சாதனை படைத்த சேலம் பள்ளி மாணவர்கள்.

பெற்றோரின் வழிகாட்டுதலுடன்,சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விசைத்தறியில் 80 மீட்டர் தேசியக் கொடியை நெய்து உலக அங்கீகாரம் பெற்ற அண்ணன்-தங்கையான தமிழ்ச்செல்வன் – செந்தமிழமுதுவின் சாதனை கவனம் ஈர்த்துள்ளது.

சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அண்ணன்-தங்கையான தமிழ்ச்செல்வன் (6-ம் வகுப்பு) மற்றும் செந்தமிழமுது (3-ம் வகுப்பு), 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காட்டன் கோட்டா (Cotton Kotta) பருத்தி நூலைப் பயன்படுத்தி, விசைத்தறியில் 80 மீட்டர் நீளமும், 2 அடி அகலமும் கொண்ட தேசியக் கொடியை நெய்து உலகச் சாதனை படைத்துள்ளனர்.

அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, துட்டம்பட்டியில் பயிலும் தமிழ்ச்செல்வனும், ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி, இடையப்பட்டியில் பயிலும் செந்தமிழமுதும், தங்களது பெற்றோரின் வழிகாட்டுதலுடன் இந்த முயற்சியை மேற்கொண்டனர். நாட்டுப்பற்று, தேசிய ஒருமைப்பாடு, கல்வியின் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தூய்மை மற்றும் சமூக ஒற்றுமை ஆகியவற்றை சமூகத்திடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்திலேயே இந்த உலகச் சாதனை முயற்சி வடிவமைக்கப்பட்டது.

இந்த முயற்சியின் நோக்கம் குறித்து மாணவர்களின் தந்தை ‘நன்றி’ நாராயணசாமி கூறுகையில், “இந்த முயற்சி வெறும் உலகச் சாதனைக்காக அல்ல. இந்த மண்ணுக்கும், இந்த நாட்டுக்கும், பருத்தி விளைவிக்கும் விவசாயிகளுக்கும், நெசவுத் தொழிலை உயிர்ப்புடன் காத்து வரும் நெசவாளர்களுக்கும் நன்றி செலுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சியை நானும் என்னுடைய குழந்தைகளும் இணைந்து செய்து வருகிறோம்” என்றார்.

ஜூலை 26-ம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கிய இந்த முயற்சியை இந்திய கிரிக்கெட் வீரர் டி. நடராஜன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து 20 மணி நேரத்தில் நிறைவடைந்த இந்தச் சாதனையை கின்னஸ் உலகச் சாதனையாளர் டிராகன் ஜெட்லி தலைமையிலான குழு மதிப்பீடு செய்து உறுதி செய்தது. இதையடுத்து Records India Academy – World Record 2026 அமைப்பின் உலகச் சாதனை அங்கீகாரமும் சான்றிதழும் வழங்கப்பட்டது. பின்னர் 80 மீட்டர் நீளமுள்ள தேசியக் கொடி பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது.

இந்த வெற்றிக்குப் பின்னால் பெற்றோரான எல். நாராயணசாமி மற்றும் பிரியாவின் வழிகாட்டுதலும் ஊக்கமும் முக்கிய பங்காற்றியுள்ளது. ‘நன்றி’ என்ற வார்த்தையை 1,11,111 முறை எழுதி உலகச் சாதனை படைத்த “நன்றி” நாராயணசாமியின் விடாமுயற்சியும் சமூகப் பொறுப்பும், இன்று அவரது குழந்தைகளையும் உலகச் சாதனையாளர்களாக உயர்த்தியுள்ளது.

“சாதனைக்கு வயது முக்கியமில்லை; விடாமுயற்சிதான் முக்கியம்!” என்பதை சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த அண்ணன்-தங்கை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்.