February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலம் கோட்டையை அசைக்க போகும் விஜய்-ஆட்டத்தை தொடங்கிய செங்கோட்டையன்.

தவெக”வில் இணையும் அடுத்த விஐபி?

தவெக தலைவர் விஜய், சமீப காலமாக அரசியல் களத்தில் விறுவிறுப்பான செயல்பாடுகளாலும் நீண்ட நேர உரைகளாலும் கவனம் ஈர்த்து வருகிறார்.

குறிப்பாக ஈரோடு பொதுக்கூட்டத்திற்கு பிறகு அவரது பேச்சிலும் அரசியல் அணுகுமுறையிலும் தெளிவான மாற்றம் தெரிகிறது என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இதனுடன் தவெக கட்சிக்குள்ளும் சில முக்கிய மாற்றங்கள் நடக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரோடு கூட்டத்தில் பேசிய விஜய், அண்ணாவும் எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்துகள் என்றும், அவர்களின் பெயரை பயன்படுத்த யாருக்கும் உரிமை மறுக்க முடியாது என்றும் கூறினார். மேலும், இந்த இரண்டு தலைவர்களும் பத்தாண்டு இடைவெளியில் தமிழ்நாட்டு அரசியலில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியவர்கள் என்றும், அதேபோல் ஒரு அரசியல் மாற்றத்தை தவெக உருவாக்கும் என்றும் பேசினார். இதன் மூலம் கட்சி கொடிகளிலும், அரசியல் அடையாளங்களிலும் அண்ணா, எம்ஜிஆர் ஆகியோருக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பேச்சு தவெக தொண்டர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில், விஜயின் உரைகள் அதிமுகவை மறைமுகமாக குறைத்து மதிப்பிடும் வகையில் இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதிமுகவை பலம் குறைந்த கட்சி போல் காட்டுவதன் மூலம் தவெக வளருமா என்ற கேள்வியும் எழுகிறது. தொடர்ந்து இவ்வாறு பேசினால், வரவிருக்கும் தேர்தலில் அதிமுக மற்றும் தவெக ஆதரவாளர்களிடையே கடும் வார்த்தைப் போர்கள், தீவிர பிரச்சார மோதல்கள் ஏற்படலாம் என அரசியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

விஜயின் சமீபத்திய உரைகள், கட்சியில் புதிதாக இணைவோருக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிக்கும் வகையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஈரோட்டில், செங்கோட்டையன் போன்ற முக்கிய அரசியல் பிரமுகர்கள் தவெகவில் இணைந்தது கட்சிக்கு பெரிய பலம் என்றும், அவர்களைப் போல இன்னும் பலர் கட்சியில் சேர உள்ளதாகவும், அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் விஜய் தெரிவித்தார்.

இந்த பேச்சு, இதுவரை தயக்கம் காட்டிய முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் சில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் விரைவில் தவெகில் இணையலாம் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. ஈரோடு கூட்டத்துக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் உற்சாகம் காரணமாக, மேலும் சில மூத்த தலைவர்கள் தவெகில் இணைவதற்குத் தயாராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, விஜய் அடுத்த பொதுக்கூட்டத்தை கொங்கு மண்டலத்தில் உள்ள சேலத்தில் நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக வரும் 30ஆம் தேதி சேலத்தில் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சேலம் என்பது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உறுதியான அரசியல் கோட்டையாகக் கருதப்படும் தொகுதி. அங்கு அவருக்கு வலுவான கட்சி அமைப்பும், நீண்டகால ஆதரவாளர்களும் உள்ளனர்.

இந்த சூழலில், சேலத்தில் விஜய் பொதுக்கூட்டம் நடத்தி அதிமுகவை விமர்சித்தால், அது இரு கட்சிகளுக்கும் இடையிலான அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தும் என பார்க்கப்படுகிறது. தவெக இந்த கூட்டத்தின் மூலம் அதிமுக ஓட்டுகளை ஓரளவு அசைக்கலாம் என்றாலும், எடப்பாடி பழனிசாமியின் அரசியல் அடித்தளத்தை யாராலும் எளிதில் குலைக்க முடியாது என அதிமுக தரப்பு நம்பிக்கை தெரிவிக்கிறது. அரசியல் களத்தில் இந்த நகர்வுகள் எந்த திசையில் செல்லும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Facebook
YouTube
Instagram
WhatsApp