April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அரியலூர் – லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நந்தியம்பெருமான் சுயசாம்பிகை திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருக்கல்யாணத்தைக் காணத் தமிழகம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

அரியலூர் மாவட்டம் திருமழபாடியில் அமைந்துள்ள வைத்தியநாதசுவாமி திருத்தலத்தில் சிவபெருமான் தாமே முன்னின்று நந்தியெம்பெருமானுக்குத் திருக்கல்யாணம் செய்து வைத்த புனித தலமாகும். இத்தலம் கொள்ளிடம் ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது இந்த தலம் அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தரால் பாடல் பெற்றதும், வசிஷ்டர், அகஸ்தியர் முனிவரால் பூஜிக்கப் பெற்ற புனித தலமாகும்.. இந்தக் கோயிலில் வியாக்ர பரத முனிவரின் புதல்வி சுயசாம்பிகை தேவியருக்கும் திருநந்தியெம்பெருமானுக்கும் ஆண்டு தோறும் பங்குனிமாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும். நந்தி திருமணம் பார்த்தால் முந்தி திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்
புனர்பூச நட்சத்திர நாளான இன்று கோவில் முன்புறம் செல்லும் கொள்ளிடம் ஆற்றில் முதல் முறையாக நந்தியம் பெருமான் திருக்கல்யாணம் நடைபெற்றது. திருமண மேடையில் நந்தியம்பெருமான் மற்றும் சுயசாம்பிகை தேவியார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்

மஞ்சள், சந்தனம், விபூதி, தயிர், பால் போன்ற பொருள்களால் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது . இதனையடுத்து மணமக்களுக்கு புத்தாடை அணிவித்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது
பின்னர் யாக பூஜையுடன் வேத வித்வான்கள் வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வர இன்னிசையுடன் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் மணமகள் சுயசாம்பிகை தேவியர் கழுத்தில் மணமகன் நந்தியெம்பெருமான் மாங்கல்யம் அணிவித்து பக்தர்கள் அட்சதை தூவ திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.
நந்தியம்பெருமான் திருமணத்தினை பொதுமக்கள் காண, தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருமானூர் உள்ளிட்ட பல நகரங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இவ்விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

Facebook
YouTube
Instagram
WhatsApp