February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட கல்லூர் கிராமத்தில், வடக்கு வீதியில் உள்ள காங்கிரீட் சாலை பல ஆண்டுகளாக சரியான வடிகால் வசதியின்றி அமைக்கப்பட்டதால், தற்போது குளம் போல தண்ணீர் தேங்கி நிற்பது பொதுமக்களை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த சாலையில், இருபுறமும் வடிகால் வசதி செய்யாததால் மழை காலங்களில் பள்ளம் உருவாகி, சாலை முழுவதும் சேறும் சகதியும் பரவியுள்ளது. இதனால் நடந்து செல்ல கூட வசதி இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சிறு குழந்தைகள் டெங்கு, மலேரியா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், மூத்த குடிமக்கள் வழுக்கி விழும் ஆபத்து அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

இந்த பிரச்சினையை தீர்க்க ஊராட்சி நிர்வாகத்திடமும், திருமானூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திடமும் பலமுறை மனு கொடுத்தும், நேரில் தெரிவித்து கூறியும் பலன் எதுவும் ஆகாத நிலையில், இன்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ‘நாத்து நடும் போராட்டம்’ நடத்தி தங்களுடைய எதிர்ப்பைக் கண்கூடாக வெளிப்படுத்தினர்.

இது தொடர்பாக பொதுமக்கள் தெரிவித்ததாவது,
“சாலையை போர்க்கால அடிப்படையில் இருபுறமும் வடிகால் அமைத்து, சாலையை மேடாக போட வேண்டும். அப்போதுதான் மழைநீர் தேங்காமல் வழியாக ஓடும். எங்களது மனுக்களுக்கு பலமுறை முயன்றும் நடவடிக்கை இல்லை. ஆகவே அரசு கவனத்திற்கு கொண்டு வர போராட்டம் நடத்துகிறோம். மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர்.

போராட்டத்துக்குப் பிறகு ஊராட்சி செயலாளர் உடனடியாக ஜேசிபி கொண்டு வந்து சாலையின் பள்ளங்களை சமமாக்கி,
“நாளை கிராவல் மண் அடித்து சாலையை உயர்த்தி தரப்படும்” என உறுதியளித்துள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

அதே நேரத்தில், மழைக்காலம் முடிந்த உடனே இந்த சாலை முழுவதும் புதுப் புனரமைப்பு செய்யப்பட்டு, சரியான வடிகால் அமைத்துத் தர வேண்டும் எனவும், கல்லூர் கிராமத்தின் அனைத்து வீதிகளிலும் வடிகால் வசதி ஏற்படுத்தி சாலைகளை சீரமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp