புதுச்சேரியில் வடக்கு போக்குவரத்து காவல் பிரிவு சார்பில், காவல்துறை மைதானத்தில் நடைபெற்ற போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயா பள்ளி மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு, போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் பொறுப்பான குடிமகனாக செயல்பட வேண்டிய அவசியம் குறித்து விரிவான விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, மது அருந்தி வாகனம் ஓட்டுவதை கண்டறியும் பிரீத் அனலைசர் கருவியின் செயல்முறை நேரடியாக காட்சிப்படுத்தப்பட்டது. மேலும், மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் அபாயங்கள் மற்றும் அதன் சட்டரீதியான விளைவுகள் குறித்து காவல்துறையினர் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
இதனுடன், சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள், போக்குவரத்து சிக்னல்களின் முக்கியத்துவம், விபத்துகளைத் தவிர்க்கும் முறைகள், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான ஹெல்மெட் அணிவதின் அவசியம், இளம்பருவத்தினரின் வாகன ஓட்டுதலின் ஆபத்துகள் மற்றும் வயது குறைந்தவர்களுக்கு வாகனங்களை வழங்கக் கூடாது என்ற பெற்றோர் பொறுப்பு உள்ளிட்ட தலைப்புகளில் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
மாணவர்கள் “ஹெல்மெட் அணிவோம் – உயிரைக் காப்போம்”, “போக்குவரத்து விதிகளை மதிப்போம்”, “சாலை பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் வடக்கு போக்குவரத்து காவல் பிரிவு ஆய்வாளர் ஜி. வேலாயன், உதவி ஆய்வாளர் ஆர். பில்டர், எஸ்ஜிஎஸ்ஐ கோவிந்தராஜ், எஸ்ஜிஎச்சி ஆனந்தமிர்தராஜ், காவலர்கள் பார்த்திராஜன், தங்கராஜ், பெண் காவலர் நாகலட்சுமி, WHG கலைவாணி மற்றும் பிரிட்ஜஸ் பள்ளி முனைவர் புவனா வாசுதேவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
மாணவர்களுக்கு நேரடி அனுபவத்தின் மூலம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய இந்த முயற்சி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இன்றைய விழிப்புணர்வு பெற்ற மாணவர்கள் நாளைய பொறுப்பான சாலைப் பயனாளர்கள் என்பதைக் குறிப்பிட்டு நிகழ்ச்சி நிறைவுற்றது.

More Stories
வாழ்க்கை முழு வட்டமாகச் சுழலும் ஒரு வியக்கத்தக்க தன்மையைக் கொண்டது.
*புதுச்சேரிக்கு பெருமை சேர்த்த காலாப்பட்டு அரசு பள்ளி; தேசிய அளவில் முதலிடம் பிடித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் நேரடியாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்
சமூகப் பொறுப்புணர்வுடன் களமிறங்கிய லூமினா டேட்டாமேடிக்ஸ்: புதுச்சேரியின் 400 ஆண்டுகள் பழமையான முழியன் குளம் சீரமைப்பு – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விருது வழங்கி கௌரவம்