ஈரோடு ஆகஸ்ட் – 1
காங்கயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஈரோடு மாவட்டப் பகுதிகளில் நிலவி வரும் முக்கிய பொதுமக்கள் பிரச்சினைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி, காங்கயம் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என். நடராஜ், ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், ஈரோடு – பெருந்துறை – காங்கயம் (SH-96) மாநில நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்த நிலையில், தற்போது பல இடங்களில் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, பிற சாலைகள் மாநில நெடுஞ்சாலையுடன் இணையக் கூடிய சந்திப்புகளில் குறுக்கு பாலப் பணிகள் நிறைவடையாமல் இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் மிகுந்த சிரமம் ஏற்படுவதுடன், சாலை விபத்துகளில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
மேலும், கீழ்பவானி அணையிலிருந்து ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கப்படும் நிலையில், கீழ்பவானி பிரதான கால்வாயில் பசுவட்டி கிராமம் – தோப்புக்காடு அருகே மாநில நெடுஞ்சாலை கால்வாயைக் கடக்கும் இடத்தில் நடைபெற்று வரும் பாலப் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் ஆகஸ்ட் 15-இல் தண்ணீர் திறக்கப்படும் போது பாசன நீர் விநியோகத்திற்கு இடையூறு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான விவசாயிகளின் சாகுபடி பணிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், இந்த சாலை மற்றும் பாலப் பணிகளை விரைந்து முடித்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சென்னிமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் முறையாக நடைபெறாததால் பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள் மற்றும் முதியோர்கள் அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட குடிநீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, சென்னிமலை பகுதியில் குடிநீர் விநியோகத்தை உடனடியாகச் சீரமைத்து, தேவையான இடங்களில் கூடுதல் மற்றும் மாற்றுக் குடிநீர் விநியோக ஏற்பாடுகளைச் செய்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும், இவ்விரு கோரிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் மனுவில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

More Stories
ஜோய்ஆலுக்காஸ் வழங்கும்‘பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜூவல்லரி ஷோ’புதுச்சேரி ஷோரூமில் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 16 வரை
திருவரங்கத்தில் இன்று பரபரப்பு சம்பவம்
NEET-ல் 16 மருத்துவ இடங்கள்… NIT-களில் 20-க்கும் மேற்பட்ட சேர்க்கைகள்; புதுச்சேரியில் வேதாந்து ஆச்சாரியாவின் சாதனை