June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கனிமவளம் கடத்தல்: நிகழாண்டு 95 வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிகழாண்டில் கனிமவள கடத்தலில் ஈடுபட்ட 95 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் சட்டம்- ஒழுங்கு, சாலை பாதுகாப்பு மற்றும் மாவட்ட அளவிலான மணல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரிகளில் சோதனை நடத்தி விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக கற்கள் வெட்டி எடுக்கப்படும் கல்குவாரிகளை உடனடியாக மூடவும், அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதற்காக அபராதம் வசூலிக்க கனிமவளத் துறை அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 கல்குவாரிகள் மற்றும், 2 கிரானைட் குவாரிகள் உள்பட 7 குவாரிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. குத்தகைகாலம் முடிவுற்று கைவிடப்பட்ட குவாரிகள் மற்றும் குத்தகை உரிமம் வழங்கப்படாத பகுதிகளில் சட்டவிரோதமாக கனிமங்கள் வெட்டியெடுக்கப்படும் குவாரிகளில் வருவாய்த் துறை, கனிமவளத் துறை மற்றும் காவல் துறையினா் மூலம் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிகழாண்டில் விதிமுறைகளை மீறி கனிமவளம் கடத்தியதாக ஜனவரி முதல் 5 மாதங்களில் 95 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் குவாரிகளில் தொடா் சோதனை மேற்கொள்ளப்பட்டு, அளவிற்கு அதிகமாக கற்களை வெட்டி எடுத்த குத்தகைதாரா்களுக்கு உரிய அபராதத்துடன், குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட உள்ளது என்றாா். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, ஒசூா் சாா்ஆட்சியா் ஆக்ரிதி சேத்தி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கிருஷ்ணன், மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.