July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அரசு கல்லூரியில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

அறந்தாங்கி. ஜூலை 1

புதுக்கோட்டை மாவட்டம்
ஆவுடையார்கோயில் அருகே பெருநாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி போதைப்பொருள் எதிர்ப்புக்குழுவும்,
சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் “நஷா முக்த் பாரத் அபியான்” (Nasha Mukt Bharat Abhiyan) திட்டத்தின் அறிவுறுத்தலின்படி, புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகும் இணைந்து போதைப்பொருள் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியை நடத்தின.

இந்நிகழ்ச்சிக்குக் கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் து.சண்முகசுந்தரம் தலைமை தாங்கித் தொடங்கி வைத்தார். கல்லூரி நிருவாகவியல் துறைத்தலைவர் முனைவர் மு.அன்பழகன், வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் கு.சீனிவாசன், ஆங்கிலத்துறைத்தலைவர் பேராசிரியர் அ. கணேசன், இயற்பியல் துறைத்தலைவர் முனைவர் ஏ டேவிட்கலைமணிராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில்,
கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு போதைப்பொருள் பயன்பாட்டால் உடல்நலம், மனநலம், கல்வி, குடும்பம் மற்றும் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகாமல், நல்லொழுக்கம், கல்வி மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய வாழ்க்கை முறையைப்பின்பற்ற வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பெற்றது.

நிலா கானம் கிராமிய கலைக்குழுவினரின் பாடல்கள், நாடகங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் மூலம் மாணவர்களுக்கு எளிமையான முறையில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வழங்கப்பெற்றது.

நிகழ்ச்சியின் நிறைவில், மாணவ, மாணவியர்கள் போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க உறுதுணையாக இருப்போம் என்ற உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு சுவரொட்டிகளும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பெற்றன.

இந்நிகழ்ச்சியை கல்லூரி போதைப்பொருள் எதிர்ப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் த.செந்தில்குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள் கலைச்செல்வி, சுப்புலட்சுமி கோமதி ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரிப்பேராசிரியர்கள் , அலுவலகப்பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவியர் பலரும் பங்கேற்றனர்.

செய்தியாளர் பழனிவேல்