July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மத்தூர் ஊராட்சியில் தொடரும் சுகாதார சீர்கேடு: பலமுறை செய்தி வெளியிட்டும் அதிகாரிகள் அலட்சியம்!

​மத்தூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட முக்கிய குடியிருப்பு பகுதிகளான மேல் வீதி, ராஜா வீதி, கோட்டத் தெரு, கீழ் வீதி மற்றும் மலபார் தெரு ஆகிய இடங்களில் நீண்ட நாட்களாக சாக்கடை வடிகால்கள் தூர்வாரப்படாமல் கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
​இப்பகுதிகளில் உள்ள சாக்கடைகளில் பிளாஸ்டிக் கழிவுகளும், குப்பைகளும் தேங்கி, கழிவுநீர் செல்ல வழியின்றி முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுவதோடு, டெங்கு, மலேரியா போன்ற ஆபத்தான காய்ச்சலை உருவாக்கும் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி வருகின்றன. குறிப்பாக, குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இதனால் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
​இதுகுறித்து பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் பலமுறை செய்திகள் வெளியிட்டும், ஊராட்சி நிர்வாகம் இதுவரை எந்தவித துப்புரவு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் வேதனையுடன் குற்றம் சாட்டுகின்றனர்.
​இப்பகுதியில் நோய்த்தொற்று பரவும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே, மாவட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, போர்க்கால அடிப்படையில் தேங்கிக் கிடக்கும் சாக்கடைக் கழிவுகளை அகற்றி, தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் முபாரக்