July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலம்,28/04/2026.

சேலத்தில் வினோதம் – கோடை வெயிலுக்கு டப் கொடுக்கும் இயற்கை ஏசி ஆட்டோ,வியர்க்காத பயணம்,வித்யாசமான அனுபவம்.

தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே, வெயிலின் தாக்கம் தலை காட்டத் தொடங்கியது. இதனால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிக அளவில் வெப்பம் பதிவாகி வருகிறது.

பொதுவாக கோடை காலங்களில் கத்தரி வெயில் காலத்தில் தான் அதிக அளவு வெப்பம் பதிவாகும். ஆனால், தற்போது அந்த கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால், பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியில் தலை காட்டாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். பகல் நேரத்தில் வெயிலின் கோரத்தாண்டவம் இருந்தாலும், இரவு நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக காணப்படுகிறது. இதனால், நாள் முழுவதும் கொட்டும் வியர்வை, புழுக்கம் ஆகியவை அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக அனைத்து வீடுகளிலும் மின் விசிறிகள் ஓய்வில்லாமல் ஓடி வருகிறது. இது ஒருபுறம் இருக்க பகல் நேரத்தில் கட்டாய வேலைப் பணியில் ஈடுபட வேண்டி இருக்கும் பொதுமக்களும் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
40 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு

அவர்கள் காலை முதல் மாலை வரை வெயிலில் பல்வேறு இடங்களுக்கு தங்களது பணி காரணமாக சென்று வர வேண்டிய சூழல் உள்ளதால், வெயிலின் தாக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், வருகிற மே 1- ஆம் தேதி முதல் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க கூடும் ( 40 டிகிரி செல்சியஸ் வரை) என தனியார் வானிலை மைய ஆய்வாளர் தெரிவித்துள்ளார். இதனால், வருங்காலங்களில் கடுமையான வெயிலின் தாக்கத்தை தாக்குப் பிடிக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதே போல, சேலம் மாவட்டத்திலும் நாளைக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதில், சுமார் 100 டிகிரியே தாண்டி வெயிலின் அளவு பதிவாகியுள்ளது.

ஆட்டோவில் குளு குளு வசதி

இந்த நிலையில், கோடை வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக சேலத்தை சேர்ந்த ஓட்டுனர் தனது ஆட்டோவை குளிர்ச்சியான ஆட்டோவாக மாற்றியுள்ளார். அது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். சேலம், மாமாங்கம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. 15 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வரும் இவர், சுட்டெரித்து வரும் கோடை வெயிலை சமாளிப்பதற்காக ஆட்டோவின் மேற்கூரையில் தெர்மோகோல், வைக்கோல், சோளத்தட்டை ஆகியவற்றை கூரை போல தட்டையாக அமைத்து அதில் எப்போதும் தண்ணீர் தெளிக்கும் வகையில் மோட்டார் பொருத்தியுள்ளார்.
ஆட்டோ பயணிகளுக்கு குடிநீர் வசதி

இதன் மூலம், ஆட்டோவின் மேற்கூரை ஈரப்பதத்துடன் இருப்பதால் வெயிலின் தாக்கம் பிரிதளவு ஆட்டோவில் உள்ளே இறங்குவது கிடையாது. அத்துடன், ஆட்டோவின் மேல்பகுதியில் தெளிக்கப்படும் நீரானது குழாய்கள் வழியாக கீழ் பகுதியில் வந்து விழும் வகையில் தனியாக குழாய்களும் அமைத்துள்ளார். மேலும், ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளுக்கு குடிநீர் வசதியும் அமைத்துள்ளார். இவரது இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.