July 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலம்,22/07/2026.

சேலத்தில் மூக்குத்தி,கம்மலுக்காக வீடுபுகுந்து தம்பதி அடித்துக் கொலை – அச்சத்தில் பொதுமக்கள்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகில் உள்ள ராமப்ப கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயராமன் – அமராவதி தம்பதி.

மூத்த குடிமக்களான‌ இருவரும் தென்னை மட்டை பின்னும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களுக்கு இரவு உணவு வழங்குவதற்காக பேரன் நவநீதன் என்பவர் நேற்றிரவு இவர்களின் வீட்டிற்குச்‌ சென்றிருக்கிறார்.

அப்போது இருவரும் உடலில் காயங்களுடன் சடலமாகக் கிடப்பதைக் கண்டு பதறிய நவநீதன், அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார். தீவட்டிப்பட்டி காவல்நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இருவரின் உடலையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். அமராவதி அணிந்திருந்த கம்மல், மூக்குத்தி போன்ற தங்க நகைகள் திருடப்பட்டிருப்பதையும்‌ கண்டறிந்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட ஜெயராமன்
தம்பதி கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னணி குறித்து நம்மிடம் பேசிய காவல்துறையினர், ” வயதான தம்பதியர் இருவரும் தனியாக குடியிருந்து வருவதை நோட்டமிட்டவர்கள், யாருக்கும் தெரியாமல் வீட்டிற்குள் நுழைந்து இருவரையும் கட்டையால் தாக்கி கொன்றிருக்கிறார்கள். அமராவதி அணிந்திருந்த 1 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றிருக்கிறார்கள்.‌ மாவட்ட எஸ்.பி, ஐ.ஜி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது”என்றனர்.
கம்மல், மூக்குத்திக்காக வீடு புகுந்து முதிய தம்பதியை அடித்துக் கொன்ற சம்பவத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.