June 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதியில் மனையிடப்பட்டா வழங்குவதில் வெளிப்படையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் – வன்னியர் முன்னேற்ற இயக்க தலைவர் லிங்கசாமி கோரிக்கை!

புதுச்சேரி, ஜூன் 27:

புதுவை வன்னியர் முன்னேற்ற இயக்கத் தலைவர் லிங்கசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதுவை அரசுக்கும், அரியாங்குப்பம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் அன்பான வேண்டுகோள்.

தேங்காய்த்திட்டு பகுதியில் இலவச மனையிடப்பட்டா வழங்கும் நோக்கில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சுமார் 80 பேருக்கு மனையிடப்பட்டா வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த முயற்சியை வன்னியர் முன்னேற்ற இயக்கத்தின் சார்பில் மனப்பூர்வமாக வரவேற்கிறோம்.

அதேவேளையில், தேங்காய்த்திட்டு பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை வீடுகளில் மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வரும் ஏராளமான குடும்பங்கள் உள்ளனர். அவர்களில் பலர் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து, சொந்த வீடு மற்றும் நிலம் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.

எனவே, மனையிடப்பட்டா வழங்கும் பணியில் முழுமையான மற்றும் வெளிப்படையான ஆய்வை மேற்கொண்டு, நீண்ட காலமாக வாடகை வீடுகளில் வசித்து வரும் உண்மையான பயனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து மனையிடப்பட்டா வழங்குமாறு புதுச்சேரி அரசையும், அரியாங்குப்பம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களையும் கேட்டுக்கொள்கிறோம். இது சமூக நீதியையும், உண்மையான தகுதியுடைய மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தையும் உறுதி செய்யும் நடவடிக்கையாக அமையும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.