June 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

நீட் தேர்வு குளறுபடி: மத்திய அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி, ஜூன் 27:

நீட் (NEET) மற்றும் பல்வேறு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளைக் கண்டித்தும், இதற்குத் தார்மீகப் பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும், புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு, மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமை தாங்கினார். இதில் புதுச்சேரி பேருந்து நிலையம் மேலே உள்ள கடக்கும் பாலத்தில் ஏறி பேனர்களை தொங்கவிட்டு தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.இதில் திரளான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு, மத்திய பாஜக அரசின் கல்விக்கொள்கை மற்றும் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளுக்கு எதிராகக் கடும் கண்டனங்களை வெளிப்படுத்தினர்.

மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் வகையில் தேர்வுகளில் குளறுபடிகள் நடப்பதாகக் குற்றம் சாட்டிய போராட்டக்காரர்கள், இதற்கு முழுப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று முழக்கமிட்டனர்.

முறைகேடுகளைத் தடுக்கத் தவறிய மத்திய அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து கண்டனப் பதாகைகளை ஏந்தி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

தேர்வு முறைகேடுகளால் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு உரிய விசாரணையை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.