புதுச்சேரி இலாஸ்பேட்டை தொகுதியில் ருத்ர வன்னியர் சங்கத்தின் சிறப்புக் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று (02-03-2026) மாலை எழுச்சியுடன் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வரும் பொதுத் தேர்தலில் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு. க. கோபாலகிருஷ்ணன் அவர்கள் போட்டியிட வேண்டும் என ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலாஸ்பேட்டை மேயர் நந்தகோபால் தெரு மற்றும் அவ்வை தெரு சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் திரு. க. கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்களும், அப்பகுதி பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், “இலாஸ்பேட்டையை பூர்வீகமாகக் கொண்ட திரு. கோபாலகிருஷ்ணன் அவர்கள், இப்பகுதி மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். எளிய மக்களிடையே அவருக்கு இருக்கும் அபார செல்வாக்கும் நற்பெயரும் அவரை ஒரு மாபெரும் வெற்றி வேட்பாளராக மாற்றும்” எனத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அவர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையை அனைவரும் ஒருமித்த கருத்துடன் முன்மொழிந்தனர்.
அரசியலுக்கு வருவதற்கு முன்பே திரு. க. கோபாலகிருஷ்ணன் ஆற்றிய சமூகப் பணிகள் கூட்டத்தில் நினைவு கூரப்பட்டன:
கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்த ஏழை எளிய மக்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைப் புதுச்சேரியிலேயே முதன்முதலாகத் தனது சொந்தச் செலவில் வழங்கினார்.
சிறு வியாபாரிகளுக்குத் தள்ளுவண்டிகள், நடைபாதை வியாபாரிகளுக்குக் குடைகள் மற்றும் பெண்களுக்குத் தையல் இயந்திரங்கள் வழங்கிப் பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளார்.
ஆண்டுதோறும் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குவதுடன், முதியோர்களுக்கான இலவச மருத்துவ முகாம்களையும் முன்னின்று நடத்தி வருகிறார்.
எந்தவித எதிர்பார்ப்புமின்றி மக்கள் பணியாற்றும் ஒருவரே மக்கள் பிரதிநிதியாக வர வேண்டும் என்ற பொதுமக்களின் எதிர்பார்ப்புடன் இக்கூட்டம் ஒரு திருவிழா கோலமாக நிறைவு பெற்றது.

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election