June 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மணப்பாறையில் மூதாட்டியிடம் 5 பவுன் தங்கச் செயின் பறிப்பு வழக்கு:

இருவர் கைது

மணப்பாறை, ஜூன் 28:

திருச்சி மாவட்டம் மணப்பாறை வாகைகுளம் விரிவாக்கப் பகுதியில் மூதாட்டியிடம் 5 பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்ற வழக்கில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி இரண்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மணப்பாறை வாகைகுளம் விரிவாக்கப் பகுதியைச் சேர்ந்த ஜெயலெட்சுமி (62) என்பவர், கடந்த ஜூன் 17-ஆம் தேதி மாலை தனது மகள் வீட்டிற்குச் சென்று விட்டு மற்றொரு மகள் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது குரு மருத்துவமனை அருகே இரவு சுமார் 7.35 மணியளவில், எதிரே நடந்து வந்த 24 முதல் 29 வயதுடைய நபர் ஒருவர், ஜெயலெட்சுமி அணிந்திருந்த சுமார் 5 பவுன் எடையுள்ள கல் பதித்த தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினார்.

செயினை பறித்த நபர், அருகில் காத்திருந்த மற்றொருவருடன் இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜெயலெட்சுமி அளித்த புகாரின் பேரில் மணப்பாறை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் சிசிடிவி காட்சிகள், தொழில்நுட்ப ஆதாரங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

விசாரணையில், மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த விஜய் (30) மற்றும் சரவணகுமார் (23) ஆகியோர் இந்த செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் அவர்களிடம் செயின் மற்றும் இருசக்கர வாகனத்தை மணப்பாறை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்