July 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மணப்பாறையில் ஏர் ஹாரன், அதிக ஒளி LED பல்புகள், அதிவேக தனியார் பேருந்துகள் மீது உடனடி நடவடிக்கை தேவை

பொதுமக்கள், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு பாஜக முன்னாள் நகர தலைவர் கோல்டு கோபாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

மணப்பாறை, ஜூலை 21:

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகரப் பகுதிகளில் இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் பிற வாகனங்களில் அதிக சத்தம் எழுப்பும் ஏர் ஹாரன்கள் பயன்படுத்தப்படுவதால் பொதுமக்கள், முதியோர், நோயாளிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக பாஜக முன்னாள் நகர தலைவர் கோல்டு கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கோரிக்கையில், நகருக்குள் இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் வாகனங்களில் சிறப்பு ஆய்வு மேற்கொண்டு, விதிமுறைகளை மீறி பொருத்தப்பட்டுள்ள அதிக சத்தம் எழுப்பும் ஏர் ஹாரன்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், எதிரே வரும் வாகன ஓட்டிகளின் கண்களை பாதிக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ள அதிக ஒளி வீசும் விதிமுறைக்கு புறம்பான LED பல்புகளையும் அகற்றி, சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மணப்பாறை நகருக்குள் சில தனியார் பேருந்துகள் அதிவேகமாக இயக்கப்படுவதால் பொதுமக்கள் அச்சத்துடன் சாலைகளில் நடமாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் பேருந்து நிலையம் மற்றும் முக்கிய சாலைகளை கடக்க மிகவும் சிரமப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, பள்ளி தொடங்கும் காலை நேரங்களிலும், பள்ளி முடியும் மாலை நேரங்களிலும் பேருந்து நிலையம் மற்றும் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து காவல்துறையினரை நியமித்து, மாணவர்கள் பாதுகாப்பாக சாலையை கடக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

மேலும், மணப்பாறை நகருக்குள் தனியார் பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பை கடைபிடிக்க தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு, விதிமீறி அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்கள் மீது மற்றும் கடைகளுக்கு சரக்கு இறக்கும் லாரிகள் காலையில் பள்ளிகூடத்திற்க்கு செல்லும் குழந்தைகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொது மக்களுக்கும் இடையூறாக இருக்கின்ற காரணத்தால் அதற்கான நேரத்தை போக்குவரத்து காவல் அதிகாரிகள் அறிவிக்க வேண்டும் மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பொதுமக்களின் பாதுகாப்பு, மாணவர்களின் நலன் மற்றும் நகரின் போக்குவரத்து ஒழுங்கை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம், போக்குவரத்து காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக முன்னாள் நகர தலைவர் கோல்டு கோபாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறப்பு தகவல் (பெட்டி செய்தி)

✔ அதிக சத்தம் எழுப்பும் ஏர் ஹாரன்களை அகற்ற வேண்டும்.✔ கண்களை பாதிக்கும் விதிமுறைக்கு புறம்பான LED பல்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.✔ மணப்பாறை நகருக்குள் அதிவேகமாக செல்லும் தனியார் பேருந்துகளை கட்டுப்படுத்த வேண்டும்.✔ பள்ளி தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும்.✔ மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நிரந்தர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்.