சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த தாலி உள்பட ரூ.2 லட்சம் மதிப்புடைய தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேச்சேரியிலிருந்து பென்னாகரம் செல்லும் சாலையில் உள்ளது இரட்டைகிணறு. இங்கு காளியம்மன் கோவில் ஒன்று உள்ளது. சனிக்கிழமை அதிகாலை வந்த மர்ம நபர்கள் கோவிலின் மின்சாரத்தை நிறுத்தி எரிந்து கொண்டிருந்த மின்விளக்கை அணைத்தனர்.
பின்னர் அருகே இருந்த லாரியில் இருந்து இரும்பாலான லிவரை எடுத்து வந்து பூட்டை உடைத்துள்ளனர். அம்மன் கழுத்தில் இருந்த 1 பவுன் தங்கத்தால் ஆன தாலி, பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த சுமார் 1 பவுன் எடை கொண்ட தங்க காசு மாலை ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.
இச்சம்பவம் குறித்து மேச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம ஆசாமிகளைத் தேடி வருகிறார்கள். மேச்சேரி பென்னாகரம் சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
போக்குவரத்து மிகுந்த முக்கிய சாலையில் உள்ள கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்த தங்க நகைகள் திருடப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!