June 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மணப்பாறை பேருந்து நிலையத்தில் தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம்:

குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கிய எம்.எல்.ஏ. ரா. கதிரவன்

மணப்பாறை, ஜூன் 28:

திருச்சி மாவட்டம் மணப்பாறை பேருந்து நிலையத்தில், மணப்பாறை நகராட்சி மற்றும் மணப்பாறை ஸ்டார்ஸ் – மணப்பாறை நெக்ஸ்ட் ஜென் ரோட்டரி சங்கம் இணைந்து தேசிய போலியோ சொட்டு மருந்து முகாமை ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடத்தின.

இந்த முகாமில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா. கதிரவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், “போலியோ நோயை முற்றிலும் ஒழிக்க ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு தவறாமல் போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும். குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும். போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

முகாமிற்கு வருகை தந்த குழந்தைகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் ரா. கதிரவன் சாக்லேட்டுகள் வழங்கி, அவர்களுடன் அன்பாக உரையாடினார். குழந்தைகளின் நலன் குறித்து அக்கறையுடன் பேசிய அவர், பெற்றோர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அவரது இந்த செயலை பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி அதிகாரிகள், சுகாதாரத் துறை அலுவலர்கள், மணப்பாறை ஸ்டார்ஸ் – நெக்ஸ்ட் ஜென் ரோட்டரி சங்க நிர்வாகிகள், தமிழக வெற்றி கழக நிர்வாகிகள், தன்னார்வலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தனர்.