April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மீனவர்களின் வயிற்றில் அடிக்கும் அதிகாரிகள்!” – 500 ஆதரவாளர்களுடன் துறைமுக அலுவலகத்தை அதிரடியாக முற்றுகையிட்ட அன்பழகன்!

புதுச்சேரி:

புதுச்சேரி மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் செயல்படும் அதிகாரிகளைக் கண்டித்தும், படகு போக்குவரத்து உரிமத்தை ரத்து செய்ய அனுப்பப்பட்ட கடிதத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், அதிமுக மாநிலச் செயலாளர் திரு. அன்பழகன் தலைமையில் இன்று அதிரடி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

இன்று காலை புதுச்சேரி துறைமுகத்தில் உள்ள அலுவலகத்தை 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் அதிமுக தொண்டர்களுடன் திரு. அன்பழகன் அவர்கள் முற்றுகையிட்டார். அதிகாரிகளின் தன்னிச்சையான போக்கைக் கண்டித்து விண்ணதிர முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படும் அதிகாரிகளுக்கு எதிராகப் போராட்டம் தீவிரமடைந்ததால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மீனவர்களின் படகு போக்குவரத்து உரிமத்தை ரத்து செய்ய அனுப்பப்பட்ட கடிதத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

முதலமைச்சர் மற்றும் துறை அமைச்சருக்குத் தெரியாமல், மீனவர்களுக்கு எதிராகக் கடிதம் அனுப்பிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உரிமம் புதுப்பிக்க வரும் மீனவர்களிடம் தேவையற்ற கேள்விகளைக் கேட்டு அலைக்கழிப்பதை நிறுத்த வேண்டும்.

முற்றுகைப் போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய திரு. அன்பழகன், “மீனவர்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் சில அதிகாரிகள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பேரம் பேசிக் கொண்டு செயல்படுகின்றனர். முதலமைச்சர் இதைப் பற்றித் தெரியாது என்று கூறினாலும், உள்ளே இருக்கும் அதிகாரிகள் வேண்டுமென்றே அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தச் சதி செய்கின்றனர். மீனவர்களின் உரிமையை மீட்கும் வரை இந்தப் போராட்டம் ஓயாது,” எனத் தெரிவித்தார்.

இந்த முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து, அரசு தரப்பில் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளனர். இந்த விவகாரத்தில் துணைநிலை ஆளுநரும், முதலமைச்சரும் உடனடியாகத் தலையிட்டு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp