சேலம் ஓட்டலில் எல்லாரும் பார்த்தது என்ன?
சேலத்தில் பாம்புகள் அட்டகாசம் அதிகரித்துவிட்டதாக தெரிகிறது.. பாம்புகளை பத்திரமாக மீட்டுவிட வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து அக்கறை எடுத்து வருகிறார்கள் என்றாலும், பாம்பின் மீதான அச்சமும், பயமும் மட்டும் இன்னும் விலகவில்லை.
நேற்று சேலம் மாவட்டம் எடப்பாடி பஸ் ஸ்டாண்டு அருகில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை தந்துவிட்டது.
வழக்கமாக, ஏப்ரல், மே மாதங்களில், வெயிலின் தாக்கம் பொதுமக்களை வாட்டி வதைத்து வரும்போது அந்த வெப்பத்திற்கு வன விலங்குகளும், பறவைகளும்கூட தப்ப முடிவதில்லை.
வெயிலின் தாக்கம் தாங்காமல் இருப்பிடத்தை விட்டு வெளியேறும் பாம்புகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து விடுகின்றன.. எனவேதான், பாம்புகளை பார்த்ததுமே, அவைகளை பாதுகாப்பாக பிடித்து அப்புறப்படுத்திவிட வேண்டும் என்று பொதுமக்களே நினைக்கிறார்கள்.. இதற்காகவே தீயணைப்பு துறை வீரர்கள் அல்லது பாம்பு பிடி வீரர்களையும் நாடுகிறார்கள்.
தீயணைப்புத் துறையினர்
தீயணைப்பு துறை வீரர்களிடம், பாம்பினை பிடிக்கும் நவீன கருவிகள் இருப்பதால், பாம்புகளை பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டுவிடுகிறார்கள். எனினும், கோடை காலங்களில் குடியிருப்பு பகுதிகளுக்கு பாம்புகள் வருவது வழக்கமாக இருக்கும் நிலையில் இப்போதெல்லாம் குளிர்காலத்திலும் பாம்புகள் வருவது அதிர்ச்சியையும், கலக்கத்தையும் தந்துவிடுகின்றன.
சேலம் மாவட்டம்
அதிலும் சேலம் மாவட்டத்தில் பாம்புகள் தொல்லை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.. 4 நாளைக்கு முன்பு சேலம் ஆத்தூரில், சந்திரா என்பவரின் வீட்டின் பின்புறமுள்ள மரத்தில் விநோத சத்தம் கேட்டுள்ளது.. இதனால் சந்திரா அது என்னவென்று சென்று பார்த்தபோது, ஓணானை விழுங்கிய நிலையில் பச்சை கலரில் பாம்பு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே ஆத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தந்த, 4 அடி நீள பாம்பை உயிருடன் மீட்டனர்.
அதேபோல கெங்கவல்லி அருகே கூடமலை ஊராட்சி, தெற்கு காட்டுக்கொட்டாயை சேர்ந்த விவசாயி ராஜேந்திரனின் 7 அடி மலைப்பாம்பு உயிருடன் மீட்கப்பட்டது நினைவிருக்கலாம்.
எடப்பாடி பஸ் ஸ்டாண்டு முத்து
இதோ இப்போது மீண்டும் சேலம் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. எடப்பாடி நகராட்சி எல்லைக்குட்பட்டது வெள்ளாண்டி வலசு.. இந்த பகுதியில் வசித்து வருபவர் முத்து.. இவருக்கு 55 வயதாகிறது.. டூவீலர் டீலராக உள்ளார். இதற்காக அதே பகுதியில் வாகனங்கள் விற்பனை செய்யும் கடையையும் வைத்துள்ளார்..
இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை எடப்பாடி பஸ் ஸ்டாண்டு அருகில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிடுவதற்காக வந்திருந்தார். அவர் கடை வாசலில் தன்னுடைய ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றிருந்தார்..
அப்போது அங்கு திடீரென தரையில் ஊர்ந்தபடியே பாம்பு ஒன்று வந்துள்ளது.. அந்த பாம்பு ஓட்டல் வாசலில் நின்று கொண்டிருந்த முத்துவின் ஸ்கூட்டருக்குள் புகுந்துவிட்டது.. மதிய நேரத்தில் பாம்புவை சாலையில் பார்த்ததுமே அப்பகுதி பொதுமக்கள் அலறி அடித்து கத்திக்கொண்டே ஓடினார்கள்..
விஷப்பாம்பு – ஸ்கூட்டருக்குள்
உடனே இது குறித்து எடப்பாடி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் பாம்பை மீட்க முயன்றனர்.. ஆனால், ஸ்கூட்டரின் உட்பகுதிக்குள் பாம்பு சென்றுவிட்டதால் அதை உடனடியாக மீட்க முடியவில்லை..
பிறகு நீண்ட நேரம் போராடி ஸ்கூட்டருக்குள் பதுங்கி இருந்த விஷ பாம்பை பிடித்தனர்… பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள குடியிருப்பு பகுதியில், அதிலும் மதிய நேரத்தில் விஷ பாம்பு நடமாடுவது கண்டு, அந்த பகுதி மக்கள் பீதியிலும், அச்சத்திலும் உறைந்துள்ளனராம்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!