February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலம்,07/02/2026.

சேலத்தில் விஜய் பிரச்சாரக் கூட்டத்திற்கு அனுமதி கோரிய மனுவை நிராகரித்த போலீஸ் காரணம் என்ன?

சேலத்தில் விஜய் தவெக பிரச்சாரக்கூட்டத்தை நடத்த அனுமதி கேட்டு தவெக இயக்கத்தினர் கடந்த பிப்ரவரி 3ம் தேதி சேலம் மகுடஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷனில் மனு அளித்தனர்.

இதையடுத்து தவெக நிர்வாகிகள் அனுமதி கேட்ட இடத்தை ஆய்வு நடத்தினார்கள் போலீசார், தொடர்ந்து விஜய்யின் பிரச்சாரத்திற்காக அனுமதி கோரிய மனு அரசு வழிகாட்டுதல்படி இல்லை என்று நிராகரித்தனர். இதுபற்றி பார்ப்போம்.

சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் தவெக மீண்டும் தீவிர பிரச்சாரத்தில் இறங்க உள்ளது. விஜய் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். இந்த சூழலில் சேலத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்தை அக்கட்சியினர் முடிவு செய்தார்கள். இதற்காக கடந்த 3-ந்தேதி இரவு சேலம் மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் அக்கட்சி நிர்வாகிகள் மனு அளித்திருந்தார்கள்.

இது ஒருபுறம் எனில், சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் தலைமையில் நிர்வாகிகள் நேற்றுமுன்தினம் சேலம் மாநகர காவல் ஆணையர் அனில்குமார் கிரியை சந்தித்து அனுமதி தருமாறு கோரிக்கை வைத்தனர். அப்போது அவர்கள் தந்த மனுவில், சேலம் சீலநாயக்கன்பட்டி தாளமுத்து நடராஜன் திடலில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த அனுமதி தருமாறு கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து தாளமுத்து நடராஜன் திடலில் சேலம் போலீசார் ஆய்வு நடத்தினர்.

இதனிடையே தமிழக அரசு விதித்த வழிகாட்டுதல்படி விஜய்யின் மக்கள் பிரச்சாரத்திற்கு மனு தாக்கல் செய்யவில்லை என கூறப்படுகிறது. எனவே கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபனிடம் அவர் கொடுத்த மனுவை போலீசார் நேற்று திரும்ப தந்தனர். இதனால் பிரச்சார கூட்டத்திற்காக த.வெ.க.வினர் தற்போது வழங்கிய மனுக்களை போலீசார் நிராகரித்திருக்கிறார்கள்.

இது குறித்து சேலம் மாநகர காவல் ஆணையர் அனில்குமார் கிரி கூறுகையில், “விஜய் மக்கள் சந்திப்பு பிரச்சார கூட்டத்தை நடத்துவதற்கு தமிழக வெற்றிக்கழகத்தினர் தமிழக அரசு விதித்த வழிகாட்டுதல்படி மனு தாக்கல் செய்யவில்லை. உதாரணத்திற்கு அவர்கள் பிரச்சாரம் செய்யும் இடத்தில் 5 ஆயிரம் பேர் கூடுவார்கள் என்றால் 10 நாட்களுக்கு முன்பு அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்திருக்க வேண்டும். அதேபோன்று 30 ஆயிரம் பேர் கூடுவார்கள் என்று மனு கொடுத்து விட்டு, அதற்கு மேல் மக்கள் கூடுவார்கள் என்றால் அதற்கு என்ன வழி வகை செய்யப்பட்டு உள்ளது என்ற விவரங்கள் மனுவில் குறிப்பிட்டாக வேண்டும்.

அத்துடன் 30 ஆயிரம் பேர் கூட தகுதியான இடம் தானா என்பதை ஆய்வு செய்து பொதுப்பணித்துறை சான்று அளிக்க வேண்டும். அரசு வழிகாட்டுதல்படி மனு தாக்கல் செய்தால், அவர்கள் கேட்ட தேதியில் அனுமதி அளிப்போம். இதனால் அவர்கள் தற்போது கொடுத்த மனுவை நிராகரித்து அவர்களிடம் திருப்பி வழங்கப்பட்டிருக்கிறது” என்றார். விஜய் மக்கள் பிரச்சார கூட்டத்திற்காக தாக்கல் செய்த மனுவை போலீசார் நிராகரித்துள்ளதால் பிரச்சாரம் தாமதம் ஆகும் என தெரிகிறது.

Facebook
YouTube
Instagram
WhatsApp