April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலம்,02/04/2026.

சேலம் மாவட்டம் இபிஎஸ் கோட்டையாகவே இருக்குமா!?

சேலம் மாவட்டம் எப்போதுமே அதிமுகவின் கோட்டையாகத் திகழும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூறி வந்தாலும்,அது உண்மைதானா?

சந்தேகமா? என்பதே தற்போதைய பேசுபொருளாக மாறியிருக்கிறது.

சேலத்தை அதிமுகவின் கோட்டையாக தக்க வைத்துக் கொள்வது, எடப்பாடி பழனிசாமிக்கு தற்போது சற்று சவாலானதாக இருக்கலாம் என்பதே பொதுவான கருத்து.

சேலத்தை கைப்பற்றும் முனைப்பில் ஆளுங்கட்சி, பதவிக்கு வந்தது முதலே பல்வேறு களப்பணிகளை செய்து வந்துள்ளது. இதில், மூத்த தலைவர் கே.என். நேரு சேலத்துக்கு பொறுப்பேற்று, அங்குள்ள பிரச்னைகளில் கவனம் செலுத்தியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், சேலத்திலிருந்து சில நிர்வாகிகளுக்கு கூடுதல் பொறுப்புகள் மற்றும் பதவிகள் கொடுத்து, திமுகவுக்கு சேலம் மாவட்டம் மிகவும் முக்கியம் என்பதை வெளிப்படுத்தியிருந்தது. இது சேலத்தில் திமுக வாக்குகளை அதிகரிக்கச் செய்திருக்கலாம்.

மற்றொரு பக்கம், அதிமகவில் உள்ள பாமகவுக்கு என கணிசமான வாக்குகள் உள்ளன. ஆனால், தற்போது பாமக பிளவுபட்டிருப்பதால், வாக்குகளும் சிதறக்கூடும். அதிமுக, சேலத்தில் 11 தொகுதிகளில் இரண்டு தொகுதிகளை பாமகவுக்கு ஒதுக்கியிருக்கிறது.

அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக, சேலம் வடக்கு தொகுதியைக் கேட்டிருந்தது. அமமுகவோ வீரபாண்டி தொகுதியை கேட்டு கிடைக்காததால், அந்தக் கட்சிகளின் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். அது தேர்தலில் எதிரொலிக்குமா என்பது தெரியவில்லை.

இதனுடன், தவெகவும் திமுகவுக்கு எதிரான மற்றும் இளைஞர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதால், அதிமுகவுக்கு என இருக்கும் கணிசமான வாக்குகள் சிதறி, கோட்டை கைவிரிக்குமோ என்று அதிமுகவினர் அஞ்சுவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு என்று சேலத்தில் மக்கள் செல்வாக்கு உள்ளது. அவர்களது ஆதரவாளர்கள், கோட்டையை தக்க வைத்துக் கொள்ள தீவிரமாக செயல்படுவார்கள் என்றும் கணிக்கப்படுகிறது.

சேலம் மாவட்டம் பற்றிய தகவல்கள்!

1792, ஏப்ரல் 4-ஆம் தேதி பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டது சேலம். இந்த மாவட்டம் தமிழகத்துக்கு மூன்று முதல்வர்களைத் தந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள குமாரமங்கலத்தில் பிறந்தவர் டாக்டர் சுப்பராயன். ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர். 1926 டிசம்பர் முதல் 1930 அக்டோபர் வரை சென்னை மாகாண முதல்வராக இருந்தார்.

தமிழகத்தில் 1952 முதல் 1954 வரை முதல்வராக இருந்தவர் மூதறிஞர் ராஜாஜி. சுதந்திரத்துக்குப் பிறகு தமிழகத்தின் முதல் முதல்வர் ராஜாஜி.

சேலம் மாவட்டத்துக்கு பெருமை சேர்த்தவர்களில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமியும் ஒருவர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp