புதுச்சேரி (07-03-2026):
புதுச்சேரி யூனியன் பிரதேச வக்ஃப் வாரிய நியமனங்களில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளைக் கண்டித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) புதுச்சேரி மாவட்ட தலைமையகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு கொண்டு வந்த புதிய வக்ஃப் திருத்தச் சட்டத்தில், வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாத இருவரை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்ற பிரிவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி வக்ஃப் வாரியத்தின் உறுப்பினராக, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் பயிற்சி பெற்ற பா.ஜ.க மாநிலங்களவை உறுப்பினர் செல்வ கணபதி நியமிக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமைச் செயல் அதிகாரியை நியமிக்காமல் முடக்கி வைக்கப்பட்டிருந்த வக்ஃப் வாரியத்தில், தற்போது சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அவசர அவசரமாக இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு மாறாகப் பேசி வருபவரை வக்ஃப் வாரியத்தில் உறுப்பினராக நியமிப்பது “பாலுக்குப் பூனை காவல்” என்பது போல் அமையும் என ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இத்தகைய நியமனங்களால் வக்ஃப் சொத்துக்கள் அபகரிக்கப்படுமோ என்ற அச்சம் முஸ்லிம் மக்களிடையே அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டது.
இந்த மாபெரும் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு புதுச்சேரி மாவட்டத் தலைவர் ஹபீப் ரஹ்மான் தலைமை தாங்கினார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் A. முஜிபுர் ரஹ்மான் கண்டன உரையாற்றினார்.
ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் திரளாகக் கலந்து கொண்ட இந்தப் போராட்டம் எழுச்சியூட்டும் முழக்கங்களுடன் அமைதியான முறையில் நடைபெற்றது. இறுதியில் மாவட்டப் பொருளாளர் அபு பக்கர் நன்றியுரை வழங்கினார்.
புதுச்சேரி அரசு உடனடியாக இந்தத் தவறான நியமனத்தைத் திரும்பப் பெற்று, வக்ஃப் வாரியம் முறையாகச் செயல்படத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக வலியுறுத்தப்பட்டது.

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election